பொய் என்பது பூஜியத்தை போல சில சமயங்களில் மதிப்பை உயர்த்தும், சில சமயங்களில் மதிப்பை குறைக்கும். அது போல தான் உறவுகளில் எழும் பொய்களும். நீங்கள் கூறும் சில பொய்கள் சில நேரங்களில் நன்மையை விளைவிக்கும். சில நேரங்களில் எதிர்மறை நிகழ்வுகள் ஏற்பட காரணமாக இருக்கும்.
இதில் முக்கியமாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை, உங்களுக்கு நீங்களே கூறிக் கொள்ளும் பொய்கள், “இல்லை அவள் அதை கருத்தாக கொண்டு எதையும் கூறவில்லை, அவள் என்னை காதலிக்கிறாள் எனக்காக கண்டிப்பாக மாறுவாள்” என்று எதிர்பார்ப்பது பின்னாட்களில் மனநலத்தை கூட பாதிக்கலாம்.
எனவே, தயவு செய்து இனிமேலும் சில பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்….
எல்லாம் நல்லாதான் போகுது
பிரிவுகள் ஏற்படும் போதும் கூட, இல்லை எல்லாம் நன்றாக தான் போகிறது என்பது போல நீங்கள் இழுத்து பிடிக்க நினைப்பது, உங்களுக்கு நீங்களே ஆறுதல் கூறிக் கொள்வது சரியான தீர்வல்ல. நேரடியாக பேசி முடிவெடுப்பது தான் நல்லது.
என் தவறு தான்
எந்த சம்பவத்திற்கும் நீங்கள் தான் குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ள வேண்டாம். தவறு யார் மீது இருக்கிறதோ அவர்கள் திருத்திக் கொண்டால் தான் உறவு பாலம் என்பது வலுப் பெறும். எல்லா நேரங்களிலும் நீங்களே விட்டுக் கொடுத்துப் போவது உறவில் விரிசலை அதிகப்படுத்திக் கொண்டே தான் போகும்.
இது எனக்கும் வேண்டும் தான்
உறவுகளில் தவறுகள் என்பது அனைவர் மத்தியிலும் நிகழ்வது இயல்பு தான். ஆனால், அதற்காக யாரும் குற்றவாளி என்று பச்சைக் குத்திவிட முடியாது. நீங்கள் தவறே செய்திருந்தாலும் கூட அது உங்களுக்கு வேண்டியது தான் என்று எண்ணாதீர்கள்.
அவன் அந்த அர்த்தத்தில் கூறவில்லை
உங்கள் காதலன் நேரடியான அர்த்தத்தில் கூறியதை கூட, இல்லை அவன் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று உங்களை நீங்களே ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டாம். இவை எல்லாம் பின்னாளில் மனவியாதியாக கூட மாற வாய்ப்புகள் இருக்கிறது.
எனக்காக மாறுவாள்
அவள் என்னை காதலிக்கிறாள், எனக்காக அவள் மாறுவாள் என்ற எண்ணம் தவறானது. யாரும் எதற்காகவும் மாற தேவையே இல்லை. அவரது குணாதிசயங்கள் உங்களுக்கு பிடித்திருக்க வேண்டும், உங்கள் குணாதிசயங்களோடு முரண் பட்டு இருந்தாலும் ஒத்துப் போகாமல் இருக்கக் கூடாது.
தனியாக இருந்துவிடுவதே நல்லது
சண்டைகள் இல்லாத உறவே கிடையாது. அதற்காக தனிமை தான் சிறந்த முடிவு என்று தீர்மானிப்பது தவறு. இது உங்களுக்கு நீங்களே நிம்மதி தரும் என்று கூறிக்கொள்ளும் பொய்.
காதல் தோல்வி தான் காரணம்
தோல்விகள் என்பது இயல்பு. அது காதலிலும் கூட. அதற்காக மீண்டும் காதலிக்க கூடாது என்று இல்லை. மீண்டும் காதலிக்கும் போது சண்டைகள் வரலாம். ஆனால், அதற்கு தனது முந்தைய காதல் பிரிவு தான் காரணம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.