தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரத்தில் நாள்தோறும் 25 பேருக்கு குறைவாகவே கொரோனா உறுதி செய்யப்பட்டு நிலையில், இந்த வாரம் மீண்டும் 25 பேருக்கு மேல் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 30 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“தில்லி, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகின்றன. ஆகையால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பொது இடங்களில், மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும்.
மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.