ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்திலும் விராட் கோலியால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை.
காலை உணவு சாப்பிடுவதைப் போல சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களை விளாசி வந்த விராட் கோலிக்கு 2019 க்கு பிறகு சோகங்கள் தொடங்கியது. கடந்த நவம்பர் 23, 2019 இல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் சதம் அடித்தார். அதன்பிறகு, 100 க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடியும் அவரால் சதமடிக்க முடியவில்லை.
நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பு இல்லையென்பதால் கோலி எவ்வித நெருக்கடியும் இல்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டிலும் அவரை சோகங்கள் தொடர்கிறது. இந்த சீசனில் அவரால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஒரேயொரு ஆட்டத்தில் 48 ஓட்டங்கள் விளாசினார்.
கடைசி 2 ஆட்டங்களில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கப்பட்டார் கோலி. அதுவும் அவருக்குப் பலனளிக்கவில்லை.
இந்த முறையும் ஓட்டம் ஏதும் எடுக்காமல் டிரென்ட் போல்ட் திட்டத்துக்குப் பலியாகியிருக்கக்கூடும். ஆனால், பந்து செ.மீ. அளவு முன்பே விழுந்ததால், தப்பித்துவிடுவார்.
இதன்பிறகு, அதே ஓவரில் ஒரு பவுண்டரி விளாசிய கோலிக்கு, அதே ஓவரில் அதிர்ஷ்டவசமாக ஒரு பவுண்டரி கிடைத்தது. ஆனால், இந்த அதிர்ஷ்டம் அவருக்கு நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. பிரசித் கிருஷ்ணா வீசிய 2 வது ஓவரில் 9 ஓட்டங்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். இந்த முறையும் அவரால் பெரிய ஓட்டங்களை எடுக்க முடியாததால், சோகத்துடன் களத்திலிருந்து வெளியேறினார் கோலி.