கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்கள் பைபிளை கொண்டு வந்து படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாக, ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு, பெங்களூரு மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்பு, பைபிளைப் போதிப்பது குறித்த உறுதிமொழியில் பெற்றோர்கள் கையெழுத்திடுவதையும், தோத்திரங்கள் பாடுவதையும், திருமறை வகுப்புகளில் கலந்துகொள்வதையும் பள்ளி நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது என்று ஹிந்து ஜனஜக்ருதி சமிதி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக 7 நாட்களில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இப்புகாரின் அடிப்படையில், “இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 28 (3) மற்றும் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ன் விதிமீறலுக்கான பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக தெரியவந்துள்ளது” என, என்சிபிசிஆர் தெரிவித்துள்ளது.
“இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிப்போம்,” என பெங்களூரு மாவட்ட ஆட்சியர் மஞ்சுநாத் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
ஹிந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் மோகன் கவுடா பிபிசி இந்தியிடம் பேசுகையில், “இந்த பள்ளியில் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். மற்ற மாணவர்கள் மீது தங்கள் மதத்தை பள்ளி நிர்வாகம் திணிக்கிறது. இது குழந்தைகளை மூளைச்சலவை செய்வதற்கான முயற்சி. இது மாணவர்கள் மதம் மாறுவதற்கு வழிவகுக்கும்” என தெரிவித்தார்.
இந்த பள்ளியில் பைபிள் 100 ஆண்டுகளாக கற்பிக்கப்படுவதாக, பள்ளி முதல்வர் ஜார்ஜ் மேத்யூ கூறுகிறார்.
“எங்கள் பள்ளியின் ஒரு கொள்கை குறித்து சிலர் அதிருப்தி அடைந்திருப்பது குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். நாங்கள் அமைதியை விரும்பும் மற்றும் சட்டங்களை மதிக்கும் பள்ளிக்கூடம். இந்த விவகாரம் குறித்து எங்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்துள்ளோம். அவர்கள் அறிவுரையை பின்பற்றி நடப்போம். இந்த நாட்டின் சட்டத்தை நாங்கள் மீறமாட்டோம்” என அவர் தெரிவித்தார்.
பிபிசி இந்தியிடம் பேசிய மேத்யூ, “பைபிளைப் போதிப்பது குறித்த உறுதிமொழியில் பெற்றோர்கள் கையெழுத்திட்ட பின்னரும்கூட, இதுவரை பைபிள் கற்பிக்கப்படுவதற்கு எந்த பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த பொய் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது குறித்த சட்ட ஆலோசனையை பெற்றுவருகிறோம்” என தெரிவித்தார்.
கிழக்கு பெங்களூருவில் அமைந்துள்ள இந்த பிரபலமான பள்ளியில் சுமார் 75 சதவீத மாணவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவர்.
பைபிளைப் போதிப்பது குறித்த பள்ளியின் உறுதிமொழி குறித்த பிரதியை ஹிந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பு வழங்கியுள்ளது.
அந்த உறுதிமொழியில், “நன்னெறி மற்றும் ஆன்மிக நலனுக்காக காலை அசம்பிளி, திருமறை வகுப்புகள், கிளப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளிலும் உங்கள் குழந்தைகள் கலந்துகொள்வர் என்றும், பைபிள் மற்றும் தோத்திர பாடல் புத்தகத்தை பள்ளிக்குக் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டீர்கள் என்றும் உறுதியளிக்கிறீர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், “கிறிஸ்தவ மாணவர்களுக்கு பைபிளை கற்பிக்கட்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறையிடமும் வலியுறுத்தியுள்ளோம். கிறிஸ்தவ மதம் அல்லாத மாணவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு முரணானதை இந்த பைபிள் கல்வி புகுத்துகிறது. இதனால் பெற்றோர்கள் பலரும் கோபமடைந்துள்ளனர். ஆனால், தங்கள் குழந்தைகளின் கல்வி தொடர வேண்டும் என்பதை கருதி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளனர்,” என தெரிவித்தார்.
அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் கேஷவ் ராஜண்ணா பிபிசி இந்தியிடம் கூறுகையில், “நான் பள்ளிக்கு பைபிள் மற்றும் தோத்திர பாடல் புத்தகத்தை எடுத்துச் செல்வேன். என்னுடைய குழந்தைகள் தற்போது அதே பள்ளியில் படிக்கின்றனர். என்னுடைய உடன் பிறந்தவர்களும் அங்குதான் படித்தனர், அவர்களின் குழந்தைகளும் அங்குதான் படிக்கின்றனர். ஆனால், நாங்கள் இன்னும் இந்துக்களாகத்தான் உள்ளோம். நாங்கள் மதம் மாற்றப்பட மாட்டோம்” என தெரிவித்தார்.
மற்றொரு முன்னாள் மாணவரான அர்ச்சனா பிரகாஷ் கூறுகையில், “என் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக கிளாரன்ஸ் பள்ளியில் படித்தவள் நான். என்னுடைய மூத்த மகன் அங்கு தான் பள்ளிப்படிப்பை முடித்தான். என்னுடைய இரண்டாவது மகன் அங்கு உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்றான். நாங்கள் இந்து மத நடைமுறையை பின்பற்றுபவர்கள். பள்ளி நாட்களின் நினைவுகளின்போதுதோத்திரங்களை பாடுவது எனக்குப் பிடிக்கும். நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோத்திரங்களை ஆர்வத்துடன் பாடுவோம்” என தெரிவித்தார்.
பள்ளியில் சேர்வதற்கு முன்னர் பைபிள் வாசிக்க வேண்டும் என்பதும் திருமறை வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் தங்களுக்கு முன்பே சொல்லப்பட்டதாக ராஜண்ணா மற்றும் அர்ச்சனா பிரகாஷ் கூறுகின்றனர். “எங்களிடம் இதுகுறித்து முன்பே தெரிவிக்கப்பட்டது. இவற்றை தெரிந்துகொண்டுதான் நாங்கள் அப்பள்ளியில் பயின்றோம். அப்பள்ளியின் நெறிமுறைகளை நாங்கள் ஆர்வத்துடன் பின்பற்றினோம்” என அர்ச்சனா பிரகாஷ் தெரிவித்தார்.
ஹிந்து ஜனஜக்ருதி சமிதி மற்றும் ஸ்ரீ ராம சேனே உள்ளிட்ட அமைப்புகள் கடந்த மாதம் கோயில் விழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை, ஹலால் இறைச்சியை இந்துக்கள் வாங்கக்கூடாது, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் ஆசான் தொழுகையை ஒலிக்கச்செய்வதற்கு தடை விதித்தல், முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து மாம்பழங்களை வாங்கக்கூடாது, விற்கவும் கூடாது, முஸ்லிம்கள் ஓட்டும் டாக்ஸிக்களில் இந்து பக்தர்கள் கோயிலுக்கு செல்லக் கூடாது உள்ளிட்ட பலவற்றை வலியுறுத்தினர்.
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வருத்தம் தெரிவிக்குமாறு, முஸ்லிம்களை கர்நாடக அமீர்-இ-ஷரியத் கேட்டுக்கொண்டதையடுத்து முஸ்லிம்கள் எந்த போராட்டமும் இன்றி தங்கள் கடைகளை அடைத்து வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த பிரசாரம் தொடங்கியது.