இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போரினால் அந்த நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் சர்வதேச அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கோதுமை விலை அதிகரித்துக் காணப்டுகிறது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
எனவே, இந்தியாவில் இருந்து இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், அண்டை நாடுகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் தேவைகளுக்கு ஆதரவு அளிக்கவும் இந்த தடை விதிக்கப்படுவதாகவும், பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய அரசு ஏற்கெனவே வழங்கிய அனுமதியின் அடிப்படையில் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இந்தியாவில் கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கவும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
எகிப்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.