அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் அதிபர் சுமன். இவர் ஊரில் நிலம் வைத்து இருப்பவர்களை அடித்து துன்புறுத்தி, அவர்களிடம் உள்ள நிலத்தை அபகரிக்கிறார். இந்நிலையில், இதே ஊரில் வாழும் நாயகன் சாய் முரளி இன்ஜினியரிங் படித்து விட்டு குறைந்த செலவில் தரமான வீடுகளை கட்டுவதில் வல்லுனராக விளங்கி வருகிறார்.
இவரை தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கிறார்கள். தன்னால் குறைந்த செலவில் தரமான வீடுகளை கட்டித்தர முடியும் என்றும் கூறினார். இதையறிந்த அமெரிக்க நிறுவனம் ஒன்று தன்னை அழைத்திருப்பதாகவும் கூறுகிறார். இதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் சுமன், இவரை தனது விசுவாசியாக்க முயற்சிக்கிறார்.
இதற்காக திட்டம் வகுத்த சுமன், தன்னுடைய ஆட்களை வைத்து நாயகனை கொல்ல முயற்சி செய்கிறார். இந்த சண்டையில் நாயகனின் பாஸ்போர்ட்டை கிழித்து விடுகிறார்கள். இந்த சண்டையை சுமனே தடுக்கும்படி செய்து அவரை காப்பாற்றுகிறார். இதனால் தன் உயிரை காப்பாற்றிய சுமன் மீது நாயகன் மிகுந்த மரியாதை கொள்கிறார்.
பாஸ்போர்ட் கிழிந்து போனதால், நாயகனால் வெளிநாட்டுக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி அதிக சம்பளம் தருகிறேன் என்று நாயகனை தன்னிடம் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார் சுமன். நாயகனும் சுமனுக்கு விசுவாசமாக இருந்து வருகிறார். இந்த விசுவாசத்திற்கு பரிசாக நாயகனுக்கு 2 ஏக்கர் நிலம் தருகிறார். இதில் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் நாயகனுக்கு, அந்த இடத்தில் சாய்பாபா சிலை கிடைக்கிறது.
இந்த சிலையை, வீட்டில் வைத்து பூஜை செய்யலாம் என நாயகனின் பெற்றோரான டெல்லி கணேசும், வடிவுக்கரசியும் கூறுகிறார்கள். ஆனால், சாய் முரளி இது அரசாங்கத்திற்கு சொந்தம் என்று கூறி அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு வீடு திரும்பினால், வீட்டில் சாய்பாபா சிலை இருக்கிறது. இதனால் முரளியும் குடும்பத்தினரும் அதிர்ந்து போகிறார்கள்.
இந்நிலையில் குடுகுடுப்பைக்காரனான அஜய் ரத்னம், முரளியிடம் நீ போன ஜென்மத்தில் சாய்பாபாவின் தீவிர பக்தனாக இருந்தவன். அப்போது சாய்பாபாவுக்கு கோயில் கட்ட முயற்சி செய்தாய். சில காரணங்களால் உன்னால் கோயில் கட்டமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் நீ இறந்து போனாய் என்று கூறுகிறார். இதைக் கேட்ட முரளி, சுமன் கொடுத்த நிலத்தில் சாய்பாபாவுக்கு கோயில் கட்ட முயற்சி செய்கிறார். இதையறிந்த சுமன், முரளியை கோயில் கட்ட விடாமல் தடுக்கிறார்.
இறுதியில் முரளி சாய்பாபாவுக்கு கோயில் கட்டினாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் முரளிக்கு இது முதல் படம். பக்தி படம் என்பதால் ஹீரோயிசம் செய்வதற்கு பெரிதாக வேலை இல்லை. சாய்பாபா பக்தனாக மனதில் பதிகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் சுமன். கடைசியில் சாய்பாபா பக்தனாக மாறி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
நாயகனுக்கு நண்பனாக வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், பெற்றோர்கள் டெல்லி கணேஷ், வடிவுக்கரசி ஆகியோருக்கு காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
சாய்பாபாவாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். படத்தில் பெரும்பாலான காட்சிகள் இவரை சுற்றியே வருகின்றன. கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
தொடர்ந்து வந்த பேய் படங்களுக்கு மத்தியில் நல்லதொரு சாமி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணிமுத்து. சாய்பாபாவின் அற்புதங்களை இன்னும் அதிகமாக காண்பித்திருக்கலாம். கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார்.
சீனிவாசனின் ஒளிப்பதிவும், தஷியின் இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அபூர்வ மகான்’ அபூர்வம்.