அஜித்குமார் கடந்த 2013-ம் ஆண்டில், ‘ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். அந்த படத்துக்காக ஒரு கார் துரத்தல் காட்சியை படமாக்கியபோது, அவருடைய வலது முழங்காலிலும், வலது தோள் பட்டையிலும் பலத்த அடிபட்டது.
உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின், அவர் குணம் அடைந்து தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். என்றாலும் அவருடைய முழங்காலிலும், தோள் பட்டையிலும் அவ்வப்போது வலி இருந்து கொண்டிருந்தது. வலி இருந்த பகுதிகளில் டாக்டர்கள் ‘ஸ்கேன்’ எடுத்துப் பார்த்து, ‘ஆபரேஷன்’ செய்து கொண்டால்தான் முழுமையாக குணம் அடைய முடியும் என்று கூறினார்கள்.
அஜித்குமாருக்கு தொடர்ந்து படப்பிடிப்புகள் இருந்ததால் உடனடியாக ‘ஆபரேஷன்’ செய்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் அவர், ‘வேதாளம்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தபோது, ஏற்கனவே அடிபட்ட இடத்தில் மீண்டும் அடிபட்டதால், வலி தாங்காமல் துடித்தார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது, உடனடியாக ‘ஆபரேஷன்’ செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அஜித்குமாருக்கு வருகிற 24-ந் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், ‘ஆபரேஷன்’ நடக்கிறது. அவருடைய வலது முழங்காலிலும், தோள் பட்டையிலும் ‘ஆபரேஷன்’ நடைபெற இருக்கிறது. ஆபரேஷனுக்குப்பின், அஜித்குமார் 9 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதன்படி அவர் சென்னையில் 9 வாரங்கள் ஓய்வு கொண்ட பிறகு லண்டன் சென்று சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்து இருக்கிறார்.