அந்தியூரில் இருந்து சென்னையில் உள்ள அத்தை வீட்டுக்கு வருகிறார் நாயகி கண்மணி (கல்கி). சென்னைக்கு வந்தவுடனே தன் அத்தை வேலை செய்யும் பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேருகிறார். அங்கு வேலை செய்யும் மதிக்கும் (பிரபு சரவணன்) கண்மணிக்கும் நட்பு ஏற்படுகிறது.
கண்மணி குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நிஷாந்த், குடித்துவிட்டு ஜாலியாக பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருகிறார். இவர் கண்மணி மீது காதல் வயப்படுகிறார். தன் காதலை சொல்லி கண்மணியை தொந்தரவும் செய்கிறார். ஆனால், கண்மணியோ காதலை ஏற்க மறுக்கிறார். நிஷாந்த்தின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதால், கேட்க ஆள் இல்லாமல் குடித்துவிட்டு ஊதாரித்தனமாக இருப்பது கண்மணிக்கு தெரியவருகிறது. இதனால், நிஷாந்த்தை திருத்த முயற்சி செய்கிறார்.
கண்மணியின் அறிவுரையால் நிஷாந்த் குடிப்பதை விட்டு திருந்துகிறார். மேலும் கண்மணியை திருமணம் செய்துக் கொள்ளவும் கட்டாயப்படுத்துகிறார். ஆனால், கண்மணியோ அதற்கு உடன்படவில்லை. அதேசமயம் கண்மணியை காதலிக்கத் தொடங்கும் மதி, அதை சொல்வதற்கு தயங்குகிறார்.
இந்த சூழ்நிலையில், கண்மணியின் பெற்றோர் கண்மணிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறார்கள்.
இறுதியில், கண்மணி யாரை திருமணம் செய்துக்கொண்டாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் கண்மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கல்கி துறுதுறு பெண்ணாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். கதை முழுவதுமே இவரை சுற்றியே அமைந்திருக்கிறது. சென்டிமென்ட் காட்சிகளில் இன்னும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கலாம்.
மதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபு சரவணன் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன், நடன காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். நிஷாந்தாக நடித்திருப்பவருக்கு பணக்கார பையன் கதாபாத்திரம். ஆனால், இந்த கதாபாத்திரம் இவருக்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை. நடிக்கவும் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். இவருடைய நடிப்பு செயற்கைத் தனமாக அமைந்திருக்கிறது.
முக்கோண காதல் கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பால சீனிவாசன். ஆனால், இந்த மாதிரி கதை கொண்ட படங்கள் பல வந்திருக்கின்றன. எனவே, இப்படத்தில், புதுமை ஒன்றும் இல்லை. தகுந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கலாம். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சுருக்கமாக சொல்லியிருக்கலாம். தேவையற்ற காட்சிகள், திரைக்கதையில் தொய்வு என பல விஷயங்கள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.
படத்தில் வசனம் பேசுபவர்கள் அனைவரும் தத்துவங்கள் பேசுகிறார்கள். இது யதார்த்த வசனமாக அமையவில்லை. கதாநாயகியின் வீட்டை ஒவ்வொரு முறை காட்டும்போது வேறுவேறு வீடாக காட்டுகிறார்கள். சென்னையில் கதை நடக்கும்படி எடுத்திருக்கிறார்கள். ஆனால், காட்சிகளை பார்க்கும்போது கிராமத்து பின்னணி தெரிகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் தொடர்ச்சி இல்லை. இவை அனைத்தையும் இயக்குனர் சரிபார்த்திருக்கலாம்.
ஜீவன் மயில் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஒரு பாடல் மட்டும் கேட்கும் படியாக அமைந்திருக்கிறது. நவ்சாத் ஒளிப்பதிவு பேசப்படவில்லை.
மொத்தத்தில் ‘இனிய உளவாக’ இனிமை இல்லை.