நடிகர் அஜித்குமார் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தபோது திடீர் விபத்து ஏற்பட்டது. கார் துரத்தல் மற்றும் சண்டை காட்சியில் அவர் நடித்தபோது, அவருடைய வலது முழங்காலிலும், தோள்பட்டையிலும் பலத்த அடிபட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். அஜித்குமார் தற்காலிகமாக குணமடைந்தாலும் அவருக்கு அடிபட்ட இடத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து டாக்டர்கள் ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்தார்கள். அடிபட்ட இடங்களில் ‘ஆபரேஷன்’ செய்துகொண்டால்தான், முழுமையாக குணமடைய முடியும் என்று அஜித்குமாரிடம் டாக்டர்கள் கூறினார்கள். தொடர்ந்து படப்பிடிப்புகள் இருந்ததால் அஜித்குமாரினால் உடனடியாக ‘ஆபரேஷன்’ செய்துகொள்ள முடியவில்லை.
இந்தநிலையில் ‘வேதாளம்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டு நடித்தபோது, ஏற்கனவே அடிபட்ட இடத்தில் மீண்டும் அடிபட்டது. அஜித்குமார் வலியினால் துடித்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு உடனடியாக ‘ஆபரேஷன்’ செய்யவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். வருகிற 24-ந்தேதி அவருக்கு ‘ஆபரேஷன்’ நடைபெற இருந்தது.
வலி அதிகமானதை தொடர்ந்து அஜித்குமார் நேற்று மாலை திடீரென்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு அவருக்கு ‘ஆபரேஷன்’ நடந்தது. அவருடைய வலது முழங்காலிலும், தோள்பட்டையிலும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆபரேஷனுக்கு பின் அஜித்குமார் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். அஜித்குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.