நடிகர் கமலஹாசனின் ‘தூங்காவனம்’ படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. இதேபடம் தெலுங்கு மொழியிலும் வெளிவந்து உள்ளது. இந்த படத்தை பார்க்க ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கமலஹாசன் அழைப்பு விடுத்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயவாடா சென்ற நடிகர் கமலஹாசன் நேற்று மதியம் சந்திரபாபு நாயுடுவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள்.
பின்னர் கமலஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:– அமராவதி தலைநகர் அடிக்கல் நாட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது. அப்போது என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே இப்போது முதல்– மந்திரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
‘தூங்காவனம்’ தெலுங்கு திரைப்படத்தின் சிறப்பு காட்சி விஜயவாடாவில் திரையிட திட்டமிட்டு உள்ளேன். படத்தை பார்க்க சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்து உள்ளேன். அவர் சம்மதம் தெரிவித்து உள்ளார். இதேநாளில் ஐதராபாத்திலும் சிறப்பு காட்சி திரையிட உள்ளது. தெலுங்கானா முதல்– மந்திரி சந்திரசேகரராவ் பங்கேற்க அழைப்பு விடுத்து உள்ளேன்.
சிறப்பு காட்சி திரையிடும் நாளில் படத்தில் நடித்த நடிகர்– நடிகைகள், திரைப்படக் குழுவினர் அனைவரும் பங்கேற்பார்கள். அவர்கள் பங்கேற்க வசதியாக விஜயவாடா, ஐதராபாத்தில் 6 மணி நேர இடைவெளியில் சிறப்பு காட்சி திரையிட ஏற்பாடு செய்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
கமலஹாசனுக்கு சந்திரபாபு நாயுடு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.