ரஜினி தற்போது ‘கபாலி’ படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ 2-ம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
அடுத்த வருடத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோலிவுட் வட்டாரங்களில் ‘எந்திரன்-2’ படத்தை பற்றிய ஒரு செய்தி பரவலாக உலா வந்து கொண்டிருக்கிறது.
அது என்னவென்றால், ‘எந்திரன்’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிகமாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதாம். ‘எந்திரன்’ படத்தில் நிறைய காட்சிகளில் டூப் போடாமல் நடித்த ரஜினி, அதன்பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ‘எந்திரன்’ 2-ம் பாகத்தில் அவர் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளுக்கு டூப் போட்டு எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இதற்காக ஷங்கர் மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் ரஜினி போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபர்களை தேடி வருகிறார்களாம். அவர்களுக்கு மேக்கப் போட்டு பார்ப்பதற்கு ஏற்கனெவே ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் நிபுணர்களை எல்லாம் ஷங்கர் வரவழைத்துவிட்டாராம்.
ரஜினி போன்றே உருவ ஒற்றுமை கொண்ட நபர் கிடைத்துவிட்டால், அவருக்கு மேக்கப் போட்டு, அதன்பிறகு ரஜினியிடம் சம்மதம் பெற்று படப்பிடிப்பு தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.