ஆந்திர மாநிலம் அனந்த புரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (வயது25). இவர் ஐதராபாத்தில் தங்கி இருந்து குறும்படங்களில் நடித்து வந்தார்.
முதன் முறையாக ‘இப்பட்லோ ராமுடிலா சீத்தலா எவர் உண்டா பாபு’ (இக்காலத்தில் ராமன்–சிதையை போல யார் இருக்கிறார்கள்) என்ற தெலுங்கு படத்தில் கதாநாயனாக அறிமுகமாகி நடித்து வந்தார். படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஆக இருந்தது.
பாலபிரசாந்துக்கும் ஹுக்கட் பள்ளி பவர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6–வது மாடியில் வசிக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கணவர் இல்லாத நேரத்தில் அந்த பெண் பாலபிரசாந்தை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்தார்.
இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் அதே குடியிருப்பில் வசிக்கும் தனது நண்பரை உளவு பார்க்க ஏற்பாடு செய்து இருந்தார். நேற்று அந்த பெண்ணின் கணவர் வெளியூர் சென்ற போது பாலபிரசாந்த் அந்த பெண் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்தார். இதனை உளவு பார்த்த நண்பர் அந்த பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் தனது உறவினர்களை வீட்டுக்கு அனுப்பினார். உறவினர்கள் சென்று வீட்டின் கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைக்க முயன்றனர்.
உடனே அந்த பெண் காதலன் பாலபிரசாந்தை கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்து கதவை திறந்தார். அதோடு என் மீது சந்தேகம் கொள்கிறீர்களா? என ஆவேசமாக கூச்சலிட்டு தற்கொலை மிரட்டல் விடுத்து பிளேடால் கைகளை கீறி ரகளை செய்தார். கையில் இருந்து ரத்தம் பீறிடவே அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். போகும் போது வீட்டுக் கதவை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
இதனால் பொறியில் சிக்கிய எலி போல பாலபிரசாந்த் வீட்டுக்குள் மாட்டிக்கொண்டார். தப்பிச்செல்ல வழி தெரியாமல் திருதிருவென விழித்தார். பால்கனிக்கு வந்த அவர் பைப்பை பிடித்து கீழே இறங்க முயன்றார். அப்போது தவறி விழுந்தார். 6–வது மாடியில் இருந்து விழுந்ததால் அவர் பரிதாபமாக இறந்தார்.
ஹுக்கட்பள்ளி போலீசார் பிணத்தை கைப்பற்றி நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது.