தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 18-ந் திகதி தேர்தல் நடந்தது. புதிய தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷால் பொதுச்செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும், 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவும், நடிகர் சங்க தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற உதவிய முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கவும் அனுமதி கேட்டு இருந்தார்கள். அவர்களை சந்தித்துப்பேச முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கினார்.
அதன்படி, நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் நேற்று காலை 11 மணி அளவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார்கள். அப்போது, நடிகர் சங்க தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற அனைத்து உதவிகளையும் செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தார்கள்.
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார். புதிய நிர்வாகிகள் அனைவரும் முதல்- அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது பற்றி நிருபரிடம் நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியதாவது:-
‘‘முதல்-அமைச்சர் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். எங்களுக்கு மனதார வாழ்த்து சொன்னார். ‘‘தென்னிந்திய நடிகர் சங்கத்தில், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன், மேஜர் சுந்தரராஜன் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை இந்த புதிய நிர்வாகம் மீண்டும் கொண்டு வர வேண்டும். அதை இந்த புதிய நிர்வாகம் செய்யும் என்று நம்பிக்கை இருக்கிறது.
நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக எந்த உதவியை கேட்டாலும் அரசு செய்யும்’’ என்று முதல்- அமைச்சர் கூறினார். அப்போது, நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் முதல்- அமைச்சர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை முதல்- அமைச்சர் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு, ‘‘அடிக்கல் நாட்டு விழாவுக்கு நிச்சயமாக வருகிறேன்’’ என்று கூறினார். திரையுலகை பற்றி முதல்- அமைச்சர் நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார். இவ்வாறு நாசர் கூறினார்.