தமன்னாவுக்கு ‘பாகுபலி’ படம் பெயர் வாங்கி கொடுத்தது. அதன் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தி படமொன்றில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடை உடை ஸ்டைல் மற்றும் கவர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார். தனக்கு பிடித்த விஷயங்கள் பற்றி தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் நான் உயர்ந்தது அதிர்ஷ்டம். எளிமையாக இருக்கவே எனக்கு பிடிக்கும். ஆடைகளையும் அப்படியே தேர்வு செய்கிறேன். சினிமாவில் உடுத்தும் ஆடைகளை, டைரக்டர்களும் ஆடை அலங்கார நிபுணர்களும் முடிவு செய்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் நடிகைபோல் ஆடைகள் உடுத்த மாட்டேன். எளிமையாகவும் அதே நேரம் ஸ்டைலாகவும் இருக்கும் ஆடைகளை அணிவேன்.
சமூக வலைத்தளங்களில் பார்த்தே அதுமாதிரியான ஆடைகளை தேர்வு செய்கிறேன். இந்திய மணப்பெண்கள் இப்போதைய புது யுகத்தில் எந்த மாதிரி தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று என்னை கேட்டால், அவர்கள் உடுத்தும் ஆடைகளிலேயே தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கவேண்டும். ஸ்டைலாகவும் இருக்க வேண்டும். உலகில் எனக்கு பிடித்த மணப்பெண் யார்? என்று கேட்டால் இளவரசி டயானா என்பேன்.
அவருடைய திருமணம் அதிசயிக்கத்தக்கதாக இருந்தது. அவர் நடை உடை பாவனைகள் அசத்தலாக இருந்தன. சரித்திரத்தில் வரும் மணமகள் போலவே அவர் இருந்தார். எனது மனம் கவர்ந்த மணப்பெண் அவர்தான். எனது திருமணம் ஆடம்பரமாக நடக்காது. அப்படி நடக்கும் திருமணங்கள் எனக்கு பிடிக்காது. என் திருமணம் எளிமையாக நடக்கும்.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைப்பேன். அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் திருமண சடங்குகள் இருக்கும். எனது அப்பாவும் அம்மாவும் பதிவு திருமணம் செய்து கொண்டவர்கள். நான் சடங்கு சம்பிரதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஏதோ ஒருநாளில் நடக்கப்போகும் என் திருமணம் சடங்கு சம்பிரதாயப்படியே நடக்கும்’’. இவ்வாறு தமன்னா கூறினார்.