நடிகை ஷில்பா ஷெட்டியின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்தவர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் பெற்றோருக்கு தேவேந்திர குஜ்ஜார் என்பவர் அறிமுகமானார். இவர் தன்னை மதகுரு என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தனக்கு யோகா குரு பாபா ராம்தேவை நன்கு தெரியும் என கூறினார். இதையடுத்து நடிகையின் பெற்றோருக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
இந்தநிலையில் அவர் நடிகையின் பெற்றோரிடம் ஆயுர்வேத மருந்து நிறுவனம் தொடங்க உதவி செய்வதாக கூறி ரூ. 2 கோடி வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதன்பின்னர் அவர் தலைமறைவு ஆனார். இந்த சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.
இதையடுத்து நடிகை ஷில்பா ஷெட்டியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவேந்திர குஜ்ஜாரை தேடி வந்தனர். இந்தநிலையில் தேவேந்திர குஜ்ஜார் தன் சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ராணிகலன் பகுதியில் பதுங்கி இருப்பதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் தேவேந்திர குஜ்ஜாரை கைது செய்தனர்.