வங்காளதேசத்தில் கடந்த 1971–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்தர போராட்டம் நடந்தது. அதில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
அதில் அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வங்காளதேச எதிர்க்கட்சிகளான தேசியவாத கட்சி தலைவர் கலாஹுதீன் காதிர் சவுத்ரி மற்றும் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் செகரட்ரி ஜெனரல் அலி அக்கான் முகமது முஜாகித் ஆகியோருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இவர்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீதும் அவர்களது கருணை மனுவை நிராகரித்தார். அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு 12.55 மணிக்கு டாக்கா மத்திய சிறையில் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
முன்னதாக இவர்கள் இருவரையும் அவர்களது குடும்பத்தினர் சந்தித்து பேசினார்கள். தூக்கிலிடப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் உடல்கள் ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டு சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர்கள் தூக்கிலிடப்படுவதை அறிந்ததும் இஸ்லாமிய ஜமாத்–இ–இஸ்லாமி கட்சி நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தது.
அதை தொடர்ந்து தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட டாக்கா மத்திய சிறை முன்பு ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். எனவே வங்காளசேதம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
தலைநகர் டாக்கா மற்றும் மற்றும் சிட்டகாங் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் எல்லைப் பாதுகாப்பு படை ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. வன்முறையை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூக்கிலிடப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் முஜாகித், சவுத்ரி ஆகியோருக்கு போர்க்குற்றத்தை விசாரித்த சிறப்பு நடுவர் நீதிமன்றம் 2013–ம் ஆண்டில் தூக்கு தண்டனை விதித்தது.
1971–ம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தின் போது இவர்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடத்தி துன்புறுத்தினர். ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தனர். பெண்களை கடத்தி கற்பழித்தனர். இக்குற்றங்களுக்காக அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1971–ம் ஆண்டு முன்பு வங்காளதேசம் பாகிஸ்தானின் கிழக்கு பகுதியாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திர போராட்டத்தின் போது அந்நாட்டு ராணுவத்துக்கு தற்போதைய சில எதிர்க்கட்சிகள் ஆதரவாக இருந்தன.
அவர்கள் ராணுவத்தின் உதவியுடன் 30 லட்சம் பேரை கொன்று குவித்தனர். 2 லட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இஸ்லாமிய கட்சி சுதந்திரத்தை எதிர்த்து பிரசாரமே செய்தது. அதன் தலைவர் குலாம் ஆஷம் வங்காள தேசத்தின் மத்திய கிழக்கு பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.