சிங்கப்பூர் சென்று பணம் சம்பாதித்து சென்னையில் செட்டிலான கவுரவமான குடும்பத் தந்தை சத்யராஜ். மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வரும் இவர், தனது வீட்டின் முன்பு மூன்று கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் ஒரு கடை காலியாக இருக்கிறது.
சத்யராஜ்க்கு சிங்கப்பூர் சென்று வந்த அனுபவம் உள்ளதால், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் வருண், தானும் சிங்கப்பூர் செல்வதற்காக அவரது உதவியை நாடுகிறார். இந்த அறிமுகம் காரணமாக, சத்யராஜ் எங்கு செல்வதாக இருந்தாலும் வருணின் ஆட்டோவிலேயே செல்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஒருநாள், தன் மகள், உடன் படிக்கும் மாணவருடன் பைக்கில் செல்வதை பார்க்கும் சத்யராஜ், இருவரும் காதலிப்பதாக தவறாக நினைத்து டென்ஷன் ஆகிறார். உடனடியாக, மகளின் படிப்பை நிறுத்துவதுடன், நண்பரின் மகனை திருமணம் செய்வதற்கு பேசியும் முடிக்கிறார்.
இப்படி திடீரென கல்யாணம் பேசி முடித்ததால், சத்யராஜின் மனைவி, கோபத்தில் கண்டபடி திட்டுகிறார். இதனால் சத்யராஜ்க்கு டென்ஷனுடன் மனவேதனையும் சேர்ந்துகொள்ள, காலியாக உள்ள தன் கடைக்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறார்.
போதை ஏறியதால் உளறத் தொடங்கிய நண்பர்கள், உணர்ச்சிகளைத் தூண்டும் பாலின உறவுகள் பற்றியும் பெண்களைப் பற்றியும் ஆபாசமாக பேச ஆரம்பிக்கின்றனர். இதனைக் கேட்ட சத்யராஜுக்கு சற்று சபலம் ஏற்படுகிறது. மற்ற நண்பர்கள் கிளம்பியபிறகு, நள்ளிரவில் வருணை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் வெளியில் செல்கிறார். அப்போது, பேருந்து நிறுத்தத்தில் அழகு பதுமையாக நிற்கும் அனு மோளை பார்க்கிறார். அனு மோளும், தன் கடைக்கண் பார்வையை சத்யராஜ்மீது வீசி பச்சைக்கொடி காட்டுகிறார்.
உடனே சத்யராஜ், இதை வருணிடம் சொல்கிறார். அவர், சத்யராஜையும், அனு மோளையும் தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஓட்டலுக்கு செல்கிறார். அறை எதுவும் கிடைக்காத நிலையில், கடை காலியாகத்தானே கிடக்கிறது என்று வருண் ஆலோசனை கூற, நேராக கடைக்கு வருகிறார்கள்.
உள்ளே சென்றதும் அனு மோள் சாப்பாடு கேட்கிறார். இதனால் சத்யராஜையும், அனு மோளையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சாப்பாடு வாங்க செல்கிறார் வருண். ஆனால், போதையில் ஆட்டோ ஓட்டியதாக போலீசில் மாட்டிக்கொள்கிறார். இரவு முழுவதும் காவல் நிலையத்தில் அவரை வைத்துவிடுகிறார்கள்.
இதனால், பொறியில் மாட்டிய எலியாக கடைக்குள் சிக்கிக்கொண்ட சத்யராஜ் வெளியேவர வழியின்றி தவிக்கிறார். குடும்ப கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், ஒரு வினாடியில் ஏற்பட்ட சபலத்தினால் மானமே போகப்போகிறது என்பதை எண்ணி கண்கலங்குகிறார்.
பூட்டிய கடைக்குள் நடந்தது என்ன? சத்யராஜ் தன் குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றினாரா? என்பதே மீதிக் கதை.
மலையாளத்தில் ஷட்டர் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, தமிழில் மறு ஆக்கம் செய்து இயக்கியிருக்கிறார் ஆண்டனி. மலையாளத்தில் இரண்டரை மணி நேரம் இருந்த படத்தை, தமிழுக்கு ஏற்ப இரண்டு மணி நேரத்தில் கதையை சுருக்கியிருக்கிறார். அதுவும், தமிழ் ரசிகர்கள் ரசிக்கும்படியான உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புடன் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
சபலம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை தத்ரூபமாக காட்டியிருக்கும் இயக்குனர், பெண்களுக்கு கல்வி முக்கியம் என்ற சமூக கருத்தையும் பதிவு செய்திருப்பதை பாராட்டலாம்.
எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடிய சத்யராஜ், இந்தப் படத்திலும் சற்றும் குறைவில்லாமல் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். பொறுப்பான குடும்ப தந்தையாகவும், சபலத்திற்கு உள்ளாகி குற்ற உணர்ச்சியில் கூனிக்குறுகி நிற்கும் குற்றவாளியாகவும், தனது அனுபவ நடிப்பில் பளிச்சிடுகிறார்.
சினிமாத் துறையில் மீண்டும் தன்னை முன்னணி இயக்குனராக அடையாளம் காட்டுவதற்கான வாய்ப்பு தேடி அலையும் யூகிசேது, தனது யதார்த்தமான நடிப்பில் மனதில் பதிகிறார். இப்படத்தில் இவர் எழுதிய வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம்.
முதல் படமாக இருந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பொறுப்புடன் ஏற்று சிறப்புடன் செய்திருக்கிறார் வருண். விபச்சாரியாக நடித்திருக்கும் அனு மோள், ஆடையில் எந்தவித கவர்ச்சியும் காட்டாமல், கண்களால் அனைவரையும் சுண்டி இழுக்கிறார். நடிப்பிலும் சபாஷ் பெறுகிறார். சிறப்புத் தோற்றத்தில் வரும் ஆர்.சுந்தர்ராஜன், கவுதம் மேனன் ஆகியோரின் நடிப்பும் ரசிக்கும் படியாக உள்ளது.
எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவும், நவீன் அய்யர் இசையும் படத்தை ரம்மியமாகக் கொண்டு செல்கின்றன. குறிப்பாக பின்னணி இசை சிறப்பு. ஒரு பாடல் நன்றாக வந்திருக்கிறது.
மொத்தத்தில், ஒருநாள் இரவில் மறக்க முடியாத நினைவு.