பருவ காலங்களிலேயே குளிர் காலம் தான் பலருக்கும் மிகவும் பிடித்தமான காலமாக இருக்கும். அதே சமயம் இக்காலத்தில் தான் நோய்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடும். பொதுவாக காலநிலை மாற்றம் ஏற்பட்டாலே சருமத்தில் பிரச்சனைகள் வரும். அதிலும் குளிர்ச்சியான காற்று வீசும் காலம் என்றால் சருமத்தில் வறட்சி, வெடிப்பு போன்றவை ஏற்படுவதோடு, பருக்களும் அதிகம் வரும். எனவே மற்ற காலங்களை விட குளிர் காலத்தில் சற்று அதிகமான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம்.
இங்கு அப்படி குளிர் காலத்தில் ஒவ்வொருவரும் தங்கள் அழகு பாழாகாமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைத் தவறாமல் பின்பற்றி, உங்கள் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
வறட்சியான சருமத்தினருக்கு…
குளிர் காலத்தில் மிகவும் குளிர்ச்சியான காற்றினால் சருமம் அதிக வறட்சியடையும். இதனைத் தடுக்க பாதாமை அரைத்து, தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 5-7 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.
எண்ணெய் பசை சருமத்தினருக்கு…
எண்ணெய் பசை சருமத்தினர், தினமும் இரண்டு முறை மைல்டு கிளின்சர் பயன்படுத்தி, சருமத்தைக் கழுவ வேண்டும். பின் ஓட்ஸ் அல்லது பழுத்த பப்பாளியைக் கொண்டு ஸ்கரப் செய்து வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேற்றப்பட்டு, முகப்பரு வருவது குறையும்.
மாய்ஸ்சுரைசர்
வருடம் முழுவதும் மாய்ஸ்சுரைசர் தடவுவதை மட்டும் யாரும் நிறுத்தக்கூடாது. குறிப்பாக குளிர் காலத்தில் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் மிகவும் குளிர்ந்த காற்றினால் வறட்சியடையும். எனவே இக்காலத்தில் சற்று நீர்மம் போன்ற மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவது நல்லது. இதனால் சருமத்தில் எண்ணெய் பசை தக்க வைக்கப்படும்
சன்ஸ்க்ரீன்
கோடையில் மட்டும் தான் சன்ஸ்க்ரீன் லோசன் தடவ வேண்டும் என்ற அவசியமில்லை. குளிர் காலத்திலும் இதனை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தின் pH அளவு சீராக பராமரிக்கப்படும்.
அரிசி-தயிர்-ரோஸ் எண்ணெய் ஸ்கரப்
குளிர்காலத்தில் இந்த ஸ்கரப் மிகவும் முக்கியமானது. அரிசி மாவு, தயிர் மற்றும் ரோஸ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் கருமை அகற்றப்பட்டு, சரும செல்கள் புத்துணர்ச்சியடைந்து, சருமம் பொலிவோடு காணப்படும்.