உலகளவில் ஆண்-பெண் ஊதிய சமன்பாடு ஏற்பட இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேலாகும் என உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது.
சரியாகச் சொல்ல வேண்டுமானால், தமது கணக்கீட்டின்படி, இன்னும் 118 ஆண்டுகளுக்கு பிறகே அதாவது 2133ஆம் ஆண்டுதான் இருபாலாருக்கும், ஒரே வேலை ஒரே ஊதியம் எனும் நிலைவரக்கூடும் என அந்த மன்றம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி 2006ஆம் ஆண்டு ஆண்கள் வாங்கிய ஊதியத்தையே 2015ஆம் ஆண்டில் பெண்கள் வாங்குகின்றனர்.
ஊதிய சமத்துவம் இல்லாத 145 நாடுகளின் பட்டியலில் இந்தியா 108ஆவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் கட்டுமான பணிகள், விவசாயம் போன்ற உடல் உழைப்பு அதிகம் உள்ள பணிகளில் பெண்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்கின்றார் இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் துணை தலைவர் மாலதி சிட்டிபாபு.
பெண்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
இது போன்ற பணிகளில் உள்ள சம்பள ஏற்றத்தாழ்வுகள், தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற வளர்ச்சி பெற்ற துறைகளில் இல்லை என்றாலும், வேறுவிதமான சம்பள இழப்புகள் பெண்களுக்கு ஏற்படுவதாக சிலர் கூறுகின்றனர்.
ஆண்களுக்கு இணையாக பணி செய்தாலும், பிரசவக்கால விடுமுறை காரணமாக பதவி உயர்வு கிடைக்காமல் போவது போன்ற பல நியாயமற்ற நிலையை பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என பலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பிபிசியின் 100 பெண்கள் தொடரின் ஒரு பகுதியாக பிபிசி தமிழோசையின் சங்கீதா ராஜன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.