ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படம் முடிந்ததும் ‘எந்திரன்-2’ படத்தில் நடிக்க உள்ளார். எந்திரன் 2-ம் பாகத்துக்கான கதையை டைரக்டர் ஷங்கர் உருவாக்கி விட்டார்.
இதில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இதர நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. ஜனவரி மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். ‘எந்திரன்’ படத்தில் ரஜினிகாந்த், சிட்டி, வசீகரன், என 2 தோற்றங்களில் வந்தார். எந்திரன் 2-ம் பாகத்திலும் அதுபோல் விதவிதமான தோற்றங்களில் வருகிறார். இதற்காக ரஜினிக்கு பிரத்யேகமாக ‘மேக்கப்’ போடப்படுகிறது. இந்த பணியில் ‘அவதார்’ போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய பிரபல மேக்கப் கலைஞர் சீன் புட் உள்ளிட்ட பல மேக்கப் நிபுணர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
இதற்காக ரஜினிகாந்தும் ஷங்கரும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தனர். 2 நாட்களுக்கு முன்பு பாங்காக்கில் ‘கபாலி’ படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் சென்னை வந்தார். நேற்று அவர் ‘எந்திரன்-2’ ‘மேக்கப் டெஸ்ட்’க்காக அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். அவருடன் ஷங்கரும் சென்றார். இரண்டு நாட்கள் ரஜினிகாந்துக்கு விதவிதமான ‘மேக்கப்’ போடப்படுகின்றன.
பிறகு சிறந்த ஒப்பனையை தேர்வு செய்து அதை படத்தில் பயன்படுத்துகிறார்கள். எந்திரன் 2-ம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. எனவே இந்த பயணத்தின் போது அவரையும் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார். ஒப்பனை தேர்வை முடித்து விட்டு சென்னை திரும்பும் ரஜினிகாந்த் கோவாவில் 1-ந்தேதி தொடங்க உள்ள ‘கபாலி’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.