இலங்கையின் கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களிடையே கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை என கண் மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு தேவையான சிகிச்சை அளிக்க போதிய நிதியுதவிகளை பொதுமக்களிடமிருந்து பெறும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கிழக்கிலிருந்து புறப்பட்ட நடை பயணம் ஒன்று தலைநகர் கொழும்பில் முடிவடையவுள்ளது.
‘விஷன் 2020’ எனும் அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்தது பத்துலட்சம் பேர் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இதில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்புகின்றனர்.
இலங்கை அரசின் நேரடி பங்களிப்பு இல்லாவிட்டாலும், அரச ஆதரவுடனேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவர் டாக்டர். சிறிபரதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் கண்புரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கண்புரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அளித்துவரும் உதவிகள் போதியதாக இல்லை எனவும் டாகடர் சிறிபரதன் கூறுகிறார்.