ஆப்பிரிக்காவிலிருந்து கொசு மூலம் பரவும் வைரஸ் ஒன்றிற்கும், கருவில் சிசுவிற்கு குறைபாடுகள் அதிகரிப்பதற்கும் இடையேயான தொடர்பு ஒன்றை பிரேஸில் சுகாதார அமைச்சு இனங்கண்டுள்ளது.
ஜிக்கா காய்ச்சலின் தாக்கம், பிரேசிலில் முதல் தடவையாக கடந்த ஏப்ரல் மாதம் இனங்காணப்பட்டது என அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இது, கருவில் உள்ள சிசுவின் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி குழந்தையின் தலை வளர்ச்சியை பாதிக்கலாம் என ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த வைரஸ் தாக்கம், நாட்டின் வடகிழக்கு பகுதியிலேயே அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும், 700 க்கும் அதிகமானோர் ஜிக்கா காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜிக்கா காய்ச்சல் தாக்கத்திற்கு உள்ளான பகுதிகளில் இருக்கும் பெண்களை கர்ப்பம் தரிக்க வேண்டாம் என, அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த வைரஸ் காரணமாக இந்த வாரம் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஜிக்கா காய்ச்சல் காரணமாக உலகில் ஏற்பட்ட முதல் மரணங்கள் இவை என பதியப்பட்டுள்ளன.