‘யான்’ படத்திற்குப் பிறகு ஜீவா நடிப்பில் கடந்த ஒரு வருடமாக எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது நயன்தாராவுடன் ‘திருநாள்’ படத்திலும், ஹன்சிகாவுடன் ‘போக்கிரி ராஜா’ படத்திலும், கீர்த்தி சுரேஷுடன் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் முடியும் தருவாயில் உள்ளது. இப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், தற்போது அறிமுக இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்திற்கு ‘ஜெமினி கணேசன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கதைக் களத்துக்கு ஏற்றாற்போல் ‘ஜெமினி கணேசன்’ என்று தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்கள். உடனே மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் குடும்பத்தினரிடம் அனுமதிக் கோர, அவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். அப்பேச்சுவார்த்தையில் லட்சுமி மேனனுக்கு கதை மிகவும் பிடித்துவிடவே, இப்படத்தில் நாயகியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.