அமெரிக்காவில் வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புளோரிடா மாகாணம் கனெடிக்ட் பகுதியை சேர்ந்தவர், கேத்தி பிரவுன். இவர் 3 நாட்களுக்கு முன், தனது வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஓட்டி, ஒரு படத்தை எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் கீழே’ நீ அமைதியாக இல்லையென்றால் இப்படிதான் நடக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் ஃபேஸ்புக் பக்கத்தில் 3 லட்சத்து 61 ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த மிருகவதை தடுப்பு அமைப்பினர் கொதித்தெழுந்தனர். அவர்கள் கேத்திக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர்.
மேலும் டாரிங்டன் மிருக வதை தடுப்பு அமைப்புக்கும் இமெயில் வழியாக புகார் அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான இமெயில்கள் டாரிங்டன் மிருக வதை அமைப்புக்கு கேத்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி வந்தது. இதனைத் தொடர்ந்து கேத்தியிடம் வாயில்லா பிராணியை துன்புறுத்தியதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து டாரிங்டன் அமைப்பினர் கூறுகையில்,” இந்த விஷயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம். எனவே எங்கள் அமைப்புக்கு இனிமேல் நீங்கள் இமெயில் அனுப்ப வேண்டாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி” என கூறியுள்ளனர்.