பிரபல தமிழ் நடிகர் சித்தார்த் தன்னால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். சித்தார்த்துடன் இணைந்து நடிகரும் ரேடியோ ஜாக்கியுமான பாலாஜியும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் நேற்றிரவு ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார், அதில் அவரது வீட்டு கழிவறைக்குள் கழிவு நீர் சாக்கடை தண்ணீர் நிரம்பியிருக்கிறது. அதன் கீழே ”நான் ஒரு வசதி படைத்த நடிகர். எனது வீட்டிலேயே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?” என்று கேள்வி கேட்டிருந்தார். ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தனது கருத்தினை தெரிவித்ததோடு சித்தார்த் நிறுத்திக் கொள்ளவில்லை. களத்திலும் இறங்கியும் பணியாற்றி காட்டினார்.
மேலும் வெள்ள காலத்தில் மக்கள் காருக்குள் கதவை மூடிவிட்டு இருக்க வேண்டாம். கார் கதவுகளை திறக்க முடியாமல் மும்பை வெள்ளத்தின் போது பலர் இறந்ததாக மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உங்களால் உணவு அளிக்க முடியுமென்றால் என்னை அழையுங்கள். நாங்கள் உங்களிடம் வந்து உணவு பொட்டலங்களை பெற்று கொள்கிறோம்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டால், தயவு செய்து உதவி புரியுங்கள். அவர்களை தண்ணீர் இல்லாத இடத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
நிவாரணப் பணிகளில் ஈடுபடாதவர்கள் தயவு செய்து வீட்டுக்குள் இருந்து கொள்ளுங்கள். பாலத்தில் நின்று கொண்டு வெள்ளத்தை வேடிக்கை பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.