சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நடிகை குஷ்பு, நமீதா வீடு முன்பும் நேற்று வெள்ள நீர் ஆறாக ஓடியது. போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம் முன்பும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்தது.
சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக ஈக்காட்டுதாங்கல், அசோக் பில்லர் வேளச்சேரி, கோட்டூர் புரம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் தனித் தீவாக மாறியது. இந்த பகுதிகளில் போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானர்கள். இந்த பகுதிகளில் கோடியில் வீடு கட்டியவர்கள் தெரு கோடிக்கு வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் நம்ம ஊரு நடிகர்களின் வீடுகளையும் விட்டு வைக்கவில்லை. கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடிகர், நடிகைகள் வசிக்கின்றனர். நடிகர் ராஜ்கிரண் வளசரவாக்கத்தில் வசிக்கிறார்.
நேற்று அந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதில் அவர் சிக்கித் தவித்து உள்ளார். இந்நிலையில், அவரை பாதுகாப்பு படையினர் படகு மூலம் மீட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு வீடு பட்டினப்பாக்கத்தில் உள்ளது.
அவர் வீட்டின் முன்னால் வெள்ள நீர் பெருக்கெடுத்து நின்றது. இதுகுறித்து அவர் கூறும்போது ‘தொடர்ந்து மழைபெய்ததால் தங்களுடைய பகுதிகளில் மின்சாரம் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை.
இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் எப்படித்தான் வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
நடிகர் சித்தார்த் சென்னையில் உள்ள தனது வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பெட்டி, படுக்கையுடன் நேற்று முன்தினம் மாடிக்கு சென்றார்.
மேலும், வீட்டில் நுழைந்த மழை வெள்ளத்தை படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். இந்த நிலையிலும் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாகனங்கள் மற்றும் உணவு பொட்டலங்களும் வழங்கி வருகிறார்.
மேலும், நுங்கம்பாக்கத்தில் நமீதா வீடு முன்பும் வெள்ளம் ஆறாக ஓடியது. போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம் முன்பும் வெள்ளத் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்தது.
நேற்றைய தினம் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் நடிகர்களையும் விட்டுவைக்கவில்லை.