சென்னையில் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு உதவ பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எல்லாம் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். சினிமா கலைஞர்களும் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இவர்கள் வரிசையில் இசையமைப்பாளர் இளையராஜாவும் நேரடியாக சென்று மக்களுக்கு உதவியிருக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட சென்னை பகுதிக்கு சென்று அங்கு 1 லட்சம் போர்வைகள் மற்றும் உணவுப் பொட்டலங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு வெள்ளம் பாதித்த சிறுமலர் பள்ளியில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு படகில் சென்று உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இளையராஜா வழங்கியது குறிப்பிடத்தக்கது.