ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் ராகினி திவேதி. ‘ஆர்யன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
ராகினி திவேதி தன்னிடம் பண மோசடி செய்து விட்டதாக கன்னட தயாரிப்பாளர் வெங்கடேஷ் குற்றம் சாட்டி உள்ளார். பெங்களூரில் உள்ள ஜே.பி. நகர் போலீசிலும் அவர் மீது புகார் செய்துள்ளார். புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
‘‘நான் கன்னடத்தில் ராகினி திவேதியை வைத்து புதிய படம் தயாரிக்க திட்டமிட்டேன். இதற்காக, அவருக்கு ரூ.16 லட்சம் சம்பள முன்பணமாக கொடுத்தேன். இந்த பணத்தை ராகினி திவேதியின் சகோதரர் தீக்ஷித் என்னிடத்தில் இருந்து வாங்கிச் சென்றார். ஆனால் திட்டமிட்டபடி படத்தை எங்களால் எடுக்க முடியவில்லை. படம் தயாரிப்பதை கைவிட்டு விட்டோம்.
இதனால் ராகினி திவேதியிடம் பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால் அவர் பணத்தை தர மறுத்து விட்டார். பலதடவை கேட்டும் ரூ.16 லட்சத்தை திருப்பித்தரவில்லை. அதற்கு பதிலாக வேறு படத்தில் நடித்து தருவதாக கூறினார். ராகினி திவேதியின் பதில் எங்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. நான் கொடுத்த பணத்தை தர மறுக்கும் ராகினி திவேதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.