சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில், மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக லியாகத் அலிகான் நியமிக்கப்பட்டுள்ளார் டிசம்பர் 13ம் தேதி விருகம்பாக்கத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகர்களின் சங்கத்திற்கான நிர்வாகிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டி இருந்தால், தேர்தல் நடைபெறும். சங்கத்தில், 1,300 உறுப்பினர்கள் உள்ளனர்.
கடந்த, 2014ல், நடைபெற்ற தேர்தலில், நளினி தலைவராகவும், 23 நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின், கருத்து வேறுபாட்டால், நளினி உள்ளிட்ட, 16 நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் நடந்த பொதுக்குழுவில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, டிசம்பர் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர் பட்டியல் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மூன்று அணிகளுக்குகிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. பானுபிரகாஷ், மனோபாலா, டில்லி கணேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும், சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் மற்றொரு அணியாகவும், ரவிவர்மா, கனகப்பிரியா ஆகியோர், மூன்றாவது அணியாகவும் போட்டியிடுகிறது.
தேர்தல் அதிகாரியாக லியாகத் அலிகான் நியமிக்கப்பட்டு உள்ளார். டிசம்பர் 13ம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள, ஏ.கே.ஆர்., மகாலில், காலை 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.