திருமணத்தில் வாழ்த்தி பரிசு கொடுக்கும் பழக்கம் பழங்காலம் முதலே நடைமுறையில் இருந்து வருகிறது. பரிசு கொடுப்பது என்பது சாதாரண நிகழ்வு அல்ல, உணர்வுபூர்வமானது. அவர்கள் மீது நீங்கள் எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை அளக்கும் அளவுகோல். திருமணப்பரிசு என்றும் நினைவில் நிலைத்திருக்கும் பொக்கிஷம்.
அதனால்தான் பரிசு கொடுப்பதற்கு எல்லோரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தான் கொடுக்கும் பரிசு மறக்க முடியாததாக அமைய வேண்டும் என்று மெனக்கெடுகிறார்கள். தற்போது பரிசு கொடுப்பதிலும் புதுமைகள் புகுந்து கொண்டிருக்கின்றன. அது பற்றி பார்ப்போமா!
மணமேடையில் மணப்பெண் அல்லது மண மகனுக்கு பரிசினை கொடுத்து அதில் என்ன இருக்கிறது என்பதை அறிய அவர்கள் ஆர்வம் காட்டுவதை விட, அவர்களுக்கு பிடித்தமானவை என்ன என்பதை அறிந்து அதை வாங்கி கொடுப்பது அதிகரித்து வருகிறது.
பரிசு பொருட்கள் வாங்க செல்லும்போது அவர்களையும் கூடவே அழைத்து சென்று பிரியமான பொருட்களை தேர்வு செய்ய வைத்து அதற்கான தொகையை செலுத்தி விடுகிறார்கள். சிலர் தாங்கள் இவ்வளவு தொகையை திருமண அன்பளிப்பாக கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். அந்த தொகைக்குள் உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இதுமாதிரியான பரிசு பொருட்கள் மணமகன், மணமகளின் மனதுக்கு பிடித்தமானவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்போதே அவர்களது வீட்டை சென்றடைந்துவிடுகிறது.
அதனால் பார்சலை தூக்கி செல்லும் சுமை பரிசளிப்பவருக்கு குறைந்துவிடுகிறது. சிலர் திருமணத்திற்கு பிறகு வெளியூரில் குடித்தனம் மேற்கொள்வார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம், அங்கு தேவைப்படும் பொருட்கள் போன்ற விஷயங்களை கேட்டறிந்து அதற்கேற்ப பரிசு பொருட்களை முடிவு செய்கிறார்கள். இப்போதெல்லாம் பெரிய வணிக நிறுவனங்களில் ‘கிப்ட் வவுச்சர்’ வழங்கும் வழக்கம் இருக்கிறது. மணமக்களுக்கு பரிசளிக்கும் தொகையை கிப்ட் வவுச்சராக வாங்கி கொடுத்து விட்டால் போதும்.
கல்யாண பரபரப்பு முடிந்த பிறகு நிதானமாக அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வார்கள். நிறைய பேர் திருமண அன்பளிப்பை பணமாகவே கொடுக்கிறார்கள். அதுவும் மணமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள வசதியாக இருக்கும்.
சில இடங்களில் பணத்திற்கு பதிலாக ‘செக்’ ஆகவும் கொடுக்கிறார்கள். தேவைப்படும்போது பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள ஏதுவாகிறது. திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மூலம் பரிசினை கொடுத்து அனுப்புவார்கள். அப்படி கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது. திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குள்ளாக கொடுத்து அனுப்புவது மணமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
திருமண பரிசு பொருட்களில் கண்ணாடி கலைப்பொருட்களும் இடம்பிடிக்கின்றன. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அவைகளை பாதுகாப்பாக கொடுப்பதற்கும் மெனக்கெட வேண்டியிருக்கும்.பரிசு பொருட்கள் சென்டி மெண்ட் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுவதால் வாங்குபவர்களும், பெறுபவர்களும் அதனை பாதுகாக்க வேண்டியிருக்கும்.
எனவே கண்ணாடி பரிசு பொருட்கள் தேர்வில் கவனம் தேவை. சிலர் பரிசு பொருட்களில் தங்கள் பெயர்களை எழுதுவதற்கு மறந்து விடுவார்கள். அதனால் யார் கொடுத்தார்கள்? என்பதை அறிவதற்கு வீடியோ, போட்டோக்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். ஆதலால் பரிசு கொடுக்கும்போதே வாழ்த்துடன் பெயரையும் பதிவு செய்து விட மறந்துவிடக்கூடாது.
ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரிசு பொருட்களை தேர்வு செய்யக்கூடாது. பரிசினை பெறுபவர் என்னென்றும் நினைத்து பார்க்கும் அளவிற்கு அது அமைந்திருக்க வேண்டும். புதுமண தம்பதிகள் ‘ஹனிமூன்’ பயணம் மேற்கொள்ளும்போது நிறைய தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கும். எந்த இடத்திற்கு பயணம் செய்ய போகிறார்கள், அங்கு அவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு பயண ஏற்பாட்டுக்கு உதவி புரிந்து அவர்களுடைய ஹனிமூன் பயணத்தை இனிமையாக்கலாம். பயண டிக்கெட், தங்கும் வசதி போன்ற ஏற்பாடுகளை செய்து கொடுக்கலாம்.
திருமணம் நல்லபடியாக நடக்க ஒத்துழைத்த உறவினர்கள், நண்பர்களுக்கு மணமக்கள் சார்பில் பரிசு கொடுக்கும் பழக்கமும் பரவலாகி வருகிறது. புதுமணத் தம்பதிகள் அந்த பரிசினை அவர் களின் வீட்டுக்கு சென்று கொடுத்து, அவர்களிடம் அன்பு பாராட்டுவது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.