தொலைபேசி குறுஞ்செய்திச் சேவையின் ஜாம்பவானாக திகழும் வாட்ஸ் அப்பின் பயன்பாடு, பிரேசிலில் 48 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலில் நடைபெற்று வந்த குற்றவியல் வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான வாட்ஸ் அப் ஒத்துழைக்க மறுத்தது. இதையடுத்து அதன் சேவையை 48 மணி நேரம் நிறுத்தி வைக்குமாறு, பிரேசில் மாநில நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
உலகின் மற்ற பகுதிகளிலிருந்து பிரேசில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதைக் காண்பது கவலையளிக்கிறது என்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜான் கோம் தெரிவித்துள்ளார். அதே நேரம், வாட்ஸ் அப் மீதான தடை அமலுக்கு வந்த சில மணிகளுக்குள் அதன் போட்டி சேவை நிறுவனம் ஒன்று 10 இலட்சத்துக்கும் அதிகமான புதிய பயன்பாட்டாளர்களை கையாள்வதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.