இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘ஆதி பகவன்’. இப்படம் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன்பிறகு அவருடைய இயக்கத்தில் எந்த படமும் வெளிவரவில்லை. இடையில் சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அமீர், அடுத்த வருடம் வரிசையாக மூன்று படங்களை இயக்கவிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக கதை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அமீர், தற்போது மூன்று கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறாராம். மூன்று கதைகளில் ஒவ்வொரு படங்களிலும் சிம்பு, ராணா, ஆர்யா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிம்பு வைத்து இயக்கும் படத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறாராம். ராணாவை வைத்து எடுக்கப்போகும் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கவிருக்கிறாராம். இதற்காக ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் அமீர். மூன்றாவது படத்தை ஆர்யாவை வைத்து இயக்கப் போகிறாராம்.
கிராமத்தை மையப்படுத்திய ஒரு கதையும், நகரத்தை மையப்படுத்தி ஒரு கதையும், முழுக்க முழுக்க காதலை சம்பந்தப்படுத்தியும் என மூன்று கதையை தயார் செய்து வைத்துள்ள அமீர், எந்த கதையில் யார் நடிக்கப் போகிறார் என்பதை மட்டும் ரகசியமாக வைத்திருக்கிறார்.