சென்னை: ட்விட்டரில் சிம்புவை பின்தொடரும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 10 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. இதற்காக தனது ரசிகர்கள் மற்றும் தன்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லியிருக்கிறார் சிம்பு.
பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு மீதான பிடி நாளுக்குநாள் இறுக்கிக்கொண்டே செல்கிறது.மீண்டும் கோவை போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இன்று சிம்புவின் மீதான முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.
இந்நிலையில் நேற்று இரவு தனது ட்விட்டரில் தன்னைப் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சிம்பு. இதற்கு முன்னர் சிம்பு ட்விட்டரில் பரபரப்பாக இருந்து பின்னர் தான் ட்விட்டரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
அதன் பின்னர் மீண்டும் சமீபத்தில் தான் அவர் ட்விட்டரில் தனது 2 வது கணக்கைத் தொடங்கினார். சிம்பு அக்கவுண்ட் தொடங்கிய குறுகிய நாட்களிலேயே அவரைப் பின் தொடரும் ரசிகர்களின் 10 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. “என்னைப் பின்தொடர்பவர்கள், ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்க இல்லாம நான் இல்ல” என்று நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு பதிவிட்டிருக்கிறார்.
சிம்புவின் இந்தப் பதிவிற்கு அவரது ரசிகர்கள் வழக்கம் போல தங்கள் ஆதரவை அளிக்கத் தொடங்கி இருக்கின்றனர். மேலும் #1MFollowersForSTR என்ற ஹெஷ்டேக்கையும் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.