நடிகை நதியா தற்போது தெலுங்கில் ‘அஆ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 41–வது படமாகும். இது தொடர்பாக நதியா கூறியதாவது:–
நான் 1984–ம் ஆண்டு சினிமாவில் நுழைந்தேன். அப்போது எனக்கு வயது 18. முதலில் ‘நோக்கேத்த தூரத்து கண்ணும் நட்டு’ என்ற மலையாள படத்தில் நடித்தேன். நான் மும்பையில் படித்துக் கொண்டிருந்த போது எனக்கும் ஷரிஸ்சுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் காதல் வயப்பட்டோம். நான் முஸ்லிம். அவர் மராட்டிய பிராமணர். மதத்தை பொருட்படுத்தாமல் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டனர்.
எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர் வெளிநாட்டில் சென்று நல்லா சம்பாதித்த பிறகு திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அப்போது தான் எங்கள் குடும்ப நண்பரான பாசில் என்னை சினிமாவில் நடிக்க அழைத்தார். திருமணம் தள்ளிப்போனதால் அதுவரை சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். தமிழில் நான் நடித்த முல் படம் ‘பூவே பூச்சுடவா’ எனது இயற்பெயர் ஜரீனா. சினிமாவுக்காக பாசில்தான் எனக்கு நதியா என்று பெயர் சூட்டினார்.
நான் நதி போல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பெயரை தேர்ந்தெடுத்துள்ளார். ‘பூவே பூச்சுடவா’ படத்தின் எனது கதாபாத்திரத்தின் பெயர் சுந்தரி. அந்த பெயரால் இன்னும் தமிழ்நாட்டில் என்னை பலர் அழைக்கிறார்கள். சினிமாவில் 5 வருடம் நடித்த பிறகு ஷரிசை திருமணம் செய்து கொண்டேன்.
எங்களுக்கு ஜானா, சனம் ஆகிய மகள்கள் உள்ளனர். சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த போது நான் திருமணம் செய்து கொண்டது எனது புத்திசாலித்தனமான முடிவு. குடும்ப வாழ்க்கை எல்லோருக்கும் நன்றாக அமைய வேண்டும். அது எனக்கு நன்றாக அமைந்தது. நான் நடிகை என்பதை விட குடும்ப தலைவியாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன்.
எனது மகள்கள் இப்போது அவர்களை அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். இதனால் சினிமாவில் 2004–ம் ஆண்டு ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் மறுஅறிமுகம் ஆனேன். நாங்கள் வெளிநாடுகளில் வசித்து விட்டு ஒரு தடவை மும்பை வந்த போது ஜெயம் ராஜா என்னை அணுகி சினிமாவில் நடிக்குமாறு கேட்டார். அதனால் மீண்டும் மறுஅறிமுகம் ஆனேன். வருடத்துக்கு ஓரிரு நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.