சிவக்குமார் ‘பசங்க 2’ படம் பார்த்தார். அதுபற்றி அவரது கருத்து…
‘பசங்க 2’ படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன். உளவியல், உடலியல், பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், தாயாக வேண்டியவர் நடந்துகொள்ள வேண்டிய தகவல்கள், கணவர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள், இன்றைய காலகட்டத்தில் கணவரும், மனைவியும் எவ்வாறு வாழ்க்கை வாழ்கிறார்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுப்பது, கற்றலில் அதீத திறமை உடைய மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது உட்பட சமூகத்தின் பல்வேறு தகவல்களை புட்டு, புட்டு வைக்கின்றனர்.
அனைத்து குழந்தைகளுக்கும் போட்டி போட ஆசை உள்ளதையும், வெற்றி பெறும் பிள்ளையை மட்டுமே அனைத்து போட்டிகளுக்கும் அழைத்து சென்றால் மற்ற பிள்ளைகளுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதை அழகாக எடுத்து சொல்லி உள்ளதுடன், மேடையில் ஏறும் அனைவருமே வெற்றி பெற்றவர்கள் தான் என்பதும், மேடை ஏறுவது மட்டும்தான் நமது வேலை, வெற்றி பெறுவது பற்றி கவலை இல்லை என்பது சூப்பர்.
கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இன்றைய மருத்துவர்களால் எவ்வாறு ஏமாற்ற படுகிறார்கள், அவர்கள் படும் வேதனை என்ன என்பதனை மிக தெளிவாக காட்டி உள்ளனர். பெற்றோர் என்ன நினைத்து இருந்தனரோ அதனை தங்கள் குழந்தைகளிடம் திணிப்பதை தவறு என்பதை அழகாக எடுத்து சொல்வதுடன், மதிப்பெண் மட்டுமே அவர்களது வாழ்க்கை இல்லை அவர்களது திறமை என்ன கண்டு அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதை நன்றாக எடுத்து கூறி உள்ளனர்.
இது, கற்றலில் அதீத திறமை உள்ள மாணவர்களை இந்த சமுதாயமும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் புரிந்து கொள்ள கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பான படம் இது.