சிறுநீரகத்தில் ஏற்பட்ட கல்லுக்கு சிகிச்சை பெறுவதற்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை வித்யா பாலன் வீடு திரும்பினார்.
இந்திப்பட உலகின் முன்னணி நடிகை வித்யா பாலன். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற படத்தின் மூலம் பெரும் புகழ்பெற்ற இவர், தொடர்ந்து குணச்சித்திர நடிகையாகவும், மாடலிங் துறையிலும் முன்னணியில் இருந்து வருகிறார்.
37 வயதாகும் வித்யா பாலனுக்கு இன்று புத்தாண்டுடன் 38–வது வயது பிறக்கிறது. பிறந்த நாள் விழாவை அவர் கணவருடன் நியூயார்க் நகரில் கொண்டாட திட்டமிட்டிருந்தார். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அபுதாபிக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து நியூயார்க் விமானத்தை பிடிக்க இருவரும் திட்டமிட்டிருந்தனர். இதற்காக வித்யா பாலன் கணவருடன் மும்பை விமான நிலையம் சென்று அபுதாபி விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானம் புறப்பட தயாராக இருந்த போது திடீர் என்று வித்யாபாலனுக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது.
உடனே கணவர் சித்தார்த் ராய் கபூர், வித்யாபாலனுடன் விமானத்தில் இருந்து இறங்கி நேராக காரில் மும்பை இந்துஜா மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு வித்யாபாலனுக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல் உருவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிறுநீரக கல்லை கரைப்பது தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக வித்யாபாலனின் வெளிநாட்டுப் பயணமும் பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சைக்கு பின்னர் வித்யா பாலன் இன்று வீடு திரும்பினார். வீட்டில் இருந்தபடியே இன்று தனது பிறந்தநாளையும், புத்தாண்டையும் ஒருசேர கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
தனது ரசிகர்களுக்கு இந்த தகவலை டுவிட்டர் மூலம் பகிர்ந்துள்ள வித்யா பாலன், பிறந்தநாளின்போது வீட்டில் இருப்பதை மகிழ்ச்சியாய் உணர்கிறேன். உங்களது அன்பு, பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.