நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்குகளை ரத்துசெய்ய கோரி நடிகர் சிம்பு, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பின்னர் கோவையில் தொடரப்பட்ட வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மாதம் 21-ந் தேதி நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், சிம்புவுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் நடிகர் சிம்புக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்ற பரபரப்பு சினிமா துறையில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் நிலவுகிறது.