தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் நடித்த ‘ஓம் சாந்தி ஓம், லவ் ஆஜ்கல், ஏ ஜவானி ஹே திவானி, சென்னை எக்ஸ்பிரஸ், ராம்லீலா, தமாஷா, பஜிரோ மஜ்தானி’ உள்ளிட்ட பல படங்கள் வசூலில் ரூ.100 கோடியை தாண்டின.
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் நடித்தார். தீபிகா படுகோனேக்கும், இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கும் காதல் மலர்ந்து பிறகு தோல்வியில் முடிந்தது. தற்போது ரன்வீர் சிங்குடன் அவர் காதல் வயப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என்றும் இந்தி படஉலகில் கிசுகிசு பரவி உள்ளது. இந்த நிலையில் மும்பையில் நேற்று தனது 31-வது பிறந்த நாள் விழாவை தீபிகா படுகோனே கொண்டாடினார். அப்போது சினிமா வாழ்க்கை பற்றி அவர் அளித்த பேட்டி வருமாறு:-
‘‘நான் பள்ளியில் படித்தபோது விளையாட்டு வீராங்கனையாக இருந்தேன். தேசிய அளவில் பேட்மின்டன் விளையாடி இருக்கிறேன். அதன் பிறகு மாடலிங் துறைக்கு வந்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்பு தேடி அலைந்தேன். எனது படங்களை பிரபல டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் கொடுத்து நடிக்க வாய்ப்பு தரும்படி வேண்டினேன். அவர்கள் இந்த முகத்துக்கெல்லாம் சினிமாவா? நீ நடித்தால் யார் பார்ப்பார்கள் என்றெல்லாம் சொல்லி என்னை கிண்டல் செய்தனர். மனதை தளர விடாமல் பட கம்பெனிகளின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினேன்.
முதலாவதாக ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ‘நியு இயர்’ என்ற இந்தி படத்தில் நடித்தேன். அந்த படம் பாதியில் நின்றது. இனி சினிமா நமக்கு அவ்வளவுதான் என்று விரக்தி ஏற்பட்டது. அதன்பிறகு ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற படம் கிடைத்தது. அது 2007-ல் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
அந்த படம் எனது வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அதற்குப்பின் மளமளவென படங்கள் குவிந்தன. முன்னணி நடிகையாக உயர்ந்தேன். கடந்த வருடம் நான் நடித்த எல்லா படங்களும் நன்றாக ஓடின. இந்த வருடமும் எனக்கு நல்ல வருடமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.