கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தில் கிராமங்களுக்கும், விவசாய விளைநிலங்களுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சிதம்பரம் பகுதியில் உள்ள கீழகுண்டலபாடி, ஜெயகொண்டபட்டினம், வடக்குசாலயன்தோப்பு, விளாகம் உள்பட பல கிராமங்களுக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கனமழையால் சென்னை, கடலூர் உள்பட 5 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் ‘மக்களுக்காக நாம்’ என்று ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம் நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நான் தற்போது நடிகனாக இங்கு வரவில்லை. மக்களில் ஒருவனாக வந்துள்ளேன்’ என்றார்.
பின்னர், நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு, விஷால் கூறும்போது ‘இதுவரை நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை ஒப்படைக்கவில்லை. இதுதொடர்பாக நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி, அதன் முடிவுப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
அவருடன் இலங்கை ஆபர் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை சந்திரகாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள், நடிகர் சங்கர் நிர்வாகிகள் இருந்தனர்.