அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு இருந்துவரும் உரிமை மீது புதிய கட்டுப்பாடுகளை பல எதிர்ப்புகளை மீறி அறிமுகப்படுத்திய அதிபர் ஒபாமா ஒரு கட்டத்தில் கண்ணீர் சிந்தினார்.
2012ஆம் ஆண்டில் சேண்டி ஹூக் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தபோது அது நிகழ்ந்தது.
வேறுபல அரசியல் தலைவர்களும் கண்ணீர் சிந்திய தருணங்கள் உண்டு.
அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ஒலிம்பிக் கண்ணீர்
பிரஸிலின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ டா சில்வாவுக்கு 2009ல் உணர்வுப் பெருக்கெடுத்த தருணம் இது.
2016ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ரியோ டி ஜெனீரோ தெரிவான செய்தி கேட்டு அவர் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.
கர்சாயின் கண்ணீர்
செப்டம்பர் 2010ல் காபுல் பள்ளிக்கூடம் ஒன்றில் உரையாற்றிய ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், நாட்டின் வன்முறை நிலை பற்றிப் பேசியபோது அழுதுவிட்டார்.
தனது மகனேகூட உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிவந்தது பற்றி அவர் அப்போது குறிப்பிட்டார்.
குற்றச்சாட்டால் வந்த குமுறல்
ஜப்பானிய அரசியல்வாதியான ரியூடாரோ நோனோமுரா அரசு பலனத்தை செலவு செய்த விதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது பச்சை பிள்ளைப்போல பொங்கிப் பொங்கி அழுதார்.
இருந்தாலும் இவ்விவகாரம் தொடர்பில் அவர் பதவி விலக வேண்டி வந்தது.
வெற்றிக் கண்ணீரா? குளிர்காற்றுக் கண்ணீரா?
மார்ச் 2012, ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் தான் மறுபடியும் வென்ற செய்தியை அறிந்தபோது விளாடிமிர் புடினின் விழிகளில் கண்ணீர் வழிந்தது.
மிகவும் உறுதியானவர் என்ற பொதுவான பிம்பம் கொண்டவர் புடின்.
இந்த சந்தர்ப்பத்தில் புடின் கண்ணில் நீர் வழியவும் காரணம் குளிர் காற்றுதானே ஒழிய உணர்வுப் பெருக்கு அல்ல என்று அவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பதவியிழந்த நேரம்
1990ஆம் ஆண்டு நவம்பர் 28, பிரிட்டனின் பிரதமர் பதவியை விட்டுப் போகும் நேரத்தில் மார்கரெட் தாட்சர் கண்ணீர் மல்க உரையாற்றி விடைபெற்றார்.
‘அயன் லேடி’ அதாவது இரும்புப் பெண் என்று அறியப்பட்ட தாட்சர், கட்சித் தலைவர் பதவியில் போட்டியிடுவதற்கு அவரது அமைச்சரவை மறுத்ததை அடுத்து பதவி விலகினார்.