தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்களே தயாரிப்பாளர்களாக அவதாரம் எடுத்து வருகிறார்கள். சூர்யா, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களாக அவதாரம் எடுத்து, அதிலும் வெற்றிகண்டு வருகிறார்கள்.
இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் அதர்வாவும் இணைந்துள்ளார். கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் தயாரிப்பாக, அதர்வா நடித்த முதல்படமான ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
இப்படத்தில் அதர்வா நடிக்கிறாரா? என்பது கேள்விக்குறியே. இருப்பினும், இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஈட்டி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து, ‘கணிதன்’, ‘ருக்குமணி வண்டி வருது’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘கணிதன்’ படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.