உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிம்பு நேரில் ஆஜராவாரா? என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.
பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்புவிற்கு முன்ஜாமீன் அளித்த சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற 11 ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிம்பு மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்நிலையில் நாளை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிம்பு நேரில் ஆஜராவாரா? என்கிற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் சிம்பு நேரில் ஆஜரானால் அவரிடம் வாக்கு மூலம் பெற போலீசார் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி சிம்புவிற்குப் பதில் அவரது வக்கீல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதற்கிடையில் சென்னையில் போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று ஒரு மனுவை சிம்பு சார்பில் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனுவின் மீதான விசாரணை நாளை மறுநாள் வெளியாகிறது. இந்த வழக்கில் சிம்புவுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும்பட்சத்தில் அவர் சென்னை போலீசில் ஆஜராக வேண்டிய தேவை இருக்காது.
எனினும் இந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வருமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது. இதற்கான விடையானது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.