அனுஷ்கா தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சூர்யா ஜோடியாக ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-
புத்தாண்டில் புதிய முடிவுகள் எடுத்துள்ளேன். பணம் தேவையான அளவில் இருந்தால் போதும். அதிகமாக வேண்டாம். என்னை சினிமாதான் நடிகையாக இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்தியது. அந்த சினிமா துறைக்கு திருப்பி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன். வழக்கமான அனுஷ்காவை இனிமேல் பார்க்க முடியாது.
எனது பலம் பொறுமை. பலவீனம் சிறுசிறு விஷயங்களுக்கு வருத்தப்படுவது. அதில் இருந்து விடுபட முயற்சிக்கிறேன். என்னை பற்றி வந்த செய்திகளை சேகரித்து வைப்பது எனது பொழுதுபோக்கு. கள்ளம் கபடம் இல்லாமல் என்னிடம் மற்றவர்கள் பழக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். பொய் பேசுபவர்களை அறவே பிடிக்காது.
அவர்களை விட்டு தள்ளியே இருப்பேன். கஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதுதான் என்னுடைய வாழ்க்கை சூத்திரம். நான் ஒருவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்று நினைத்தால், அது நாகார்ஜுனாவுக்குத்தான். அவரால் தான் சினிமாவில் உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளேன். டைரக்டர் பூரி ஜெகன்னாத்தும் என் நன்றிக்கு உரியவர்.
எனக்கு பிடித்த நடிகர் அமிதாப்பச்சன். நடிகைகளில் ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோரை பிடிக்கும். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் நான் நடித்த ‘அருந்ததி.’ அந்த படம்தான் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க திட்டமிட்டு உள்ளேன். என்னை சந்திப்பவர்கள் உங்கள் திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். அதுபற்றி உறுதியாக சொல்ல முடியாது. நேரமும், பொருத்தமான மாப்பிள்ளையும் அமையும்போது என் திருமணம் நடக்கும்.