விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த படத்திற்கு பிறகு ‘அரிமா நம்பி’ பட இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமானார். இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சமீபகாலமாக நடைபெற்று வந்தது.
இதில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகினர். இதையடுத்து, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தமானார்கள்.
இதற்கிடையில் இப்படத்திற்கான தலைப்பையும் படக்குழுவினர் தேர்வு செய்து வந்தனர். விஜய் நடித்த ‘புலி’ படத்திற்கு ஏற்கெனவே வைப்பதாக இருந்த ‘மாரீசன்’ தலைப்பை இந்த படத்திற்கு வைக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. இதற்காக, சிம்புதேவனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படத்திற்கு ‘இருமுகன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்புடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த படம் எந்தமாதிரியான என்பதை யூகிப்பதே மிகவும் கடினமாக உள்ளது.
இன்று முதல் ‘இருமுகன்’ படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டருக்கு பெரிய வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.