இந்தியாவின் மும்பை நகரப் போலிசார் நகரின் பல பிரபல சுற்றுலா இடங்களில் “செல்ஃபீ” (திறன் பேசிகளை வைத்து தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் படங்கள்) எடுத்துக்கொள்வதைத் தடை செய்திருக்கின்றனர்.
சனிக்கிழமை ஒரு பதின்பருவப் பெண் ஒருத்தி, பண்ட்ரா கோட்டைக்கருகே இரண்டு நண்பர்களுடன் தங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது, கடலுக்குள் அலைகளால் அடித்துத் தள்ளப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது.
அவரைக் காப்பாற்றப் போன மற்றொரு ஆணும் கடலில் மூழ்கி இறந்தார்.
செல்ஃபீ எடுக்கத் தடை விதிக்கப்பட்ட இடங்களில் நகரின் பிரபலமான , மரைன் ட்ரைவ் நடைபாதை, மற்றும் கிர்கோம் சௌபாத்தி கடற்கரை ஆகியவை உட்பட 15 இடங்கள் அடங்குகின்றன.
கடந்த ஆண்டு ஒரு இந்து மத பண்டிகையின் போது, நெரிசல் ஏற்படலாம் என்ற அச்சங்கள் காரணமாக, செல்ஃபீ எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், “செல்ஃபீ” விதிக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதி என்று இரண்டு இடங்களில் எச்சரிக்கை போர்டுகள் காணப்படுகின்றன.
போலிசார் மும்பை மாநகராட்சி அதிகாரிகளை அணுகி, இது போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ஃபீக்கள் எடுத்துக்கொள்ள முயல்வதைத் தடுக்கக் கோருவார்கள். அந்த இடங்களில் உயிர் காக்கும் காவலர்களையும், எச்சரிக்கை போர்டுகளையும், நகராட்சி வைக்கும் என்று மும்பை போலிஸ் துறைக்காகப் பேசிய தனஞ்செய் குல்கர்னி பிபிசியிடம் தெரிவித்தார்.