முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ளனர். இவர்களை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் செல்வமணி, பொருளாளர் பேரரசு மற்றும் உறுப்பினர்கள் அமீர், களஞ்சியம், வெற்றிமாறன், ரமேஷ்கண்ணா ஆகியோர் நேற்று சிறையில் சந்தித்து பேசினர். பின்னர் வெளியே வந்த அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் அவருடைய மனைவி நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராமச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக ஜெயிலில் உள்ளனர். ஆயுள் தண்டனை முடிந்தும், 25 ஆண்டுகளாக விடுதலை செய்யப்படாமல் அவர்களை சிறையிலேயே அடைத்து வைத்திருப்பது கொடுமையாக உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் மட்டும் பார்க்காமல், தமிழக அரசின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்ய வழிவகை உள்ளது.
எனவே, தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவின் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. முன்பு அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கத்தின்போது கருணை அடிப்படையில் பல்வேறு ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடக்கத்தின்போது முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.
இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கையை விரைவில் எடுத்து இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். மனு அளிக்க உள்ளோம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தமிழக முதல்- அமைச்சரிடம் விரைவில் மனு அளிக்க உள்ளோம்.
ஜல்லிக்கட்டிற்கான தடையை மத்திய அரசு நீக்குவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருந்தது. இது தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் தமிழக அரசு இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடைவிதித்திருப்பது குறித்து திரைப்பட இயக்குனர் அமீர் நிருபர்களிடம் கூறுகையில், “ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிப்பதும், தடையை நீக்குவதும் மக்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.