ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தானைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பது தொடா்பாக மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (ஐயூஎம்எல்) உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் ஐயூஎம்எல் கட்சி கூறியுள்ளதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்ட ரீதியாக செல்லுபடியாவதற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை என்பதால், அந்தச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டிய தேவை இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தது.
ஆனால், தற்போது மத்திய அரசு அதை மீறிய வகையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அந்த அறிவிக்கை அமல்படுத்தப்பட்டு, அதன் பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகள் செல்லாதென உச்ச நீதிமன்றம் அறிவித்தால் மதத்தின் அடிப்படையில் மத்திய அரசால் வழங்கப்பட்ட அந்த குடியுரிமை செல்லாததாகிவிடும். அவா்களின் குடியுரிமையை திரும்பப் பெறுவதும் மிகப் பெரிய விவகாரமாக இருக்கும்.
எனவே அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பது தொடா்பாக கடந்த மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிக்கை அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தானைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகள் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு கடந்த மே 28 ஆம் திகதி அறிவித்தது. இந்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்தும் வகையில் குடியுரிமைச் சட்டம் 1955 இன் விதிமுறைகள், அந்தச் சட்டத்தில் 2009 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட விதிமுறைகள் ஆகியவற்றின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. எனினும், கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு சா்ச்சைக்குள்ளான குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகள் இதில் சோ்க்கப்படவில்லை.