கடந்த சில ஆண்டுகளாக ´வீகன்´ ஆணுறைகள் மற்றும் கழிவற்ற கருத்தடை பொருட்கள் தொடர்பான தேடல்கள் இணையத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
“சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது என்றால் சிலருக்கு பூமியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத லூப்கள், விளையாட்டு பொருட்கள், படுக்கை விரிப்புகள், ஆணுறைகளைப் பயன்படுத்துவதாகும்,” என்கிறார் நைஜீரியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிவியலாளர் முனைவர் அடெனிகே அகின்செமொலு.
ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 1000 கோடி லேடெக்ஸ் ஆணுறைகள் தயாரிக்கப்படுவதாகவும், அதில் பெரும்பாலானவை திறந்த வெளியில் வீசப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளை சபையின் மக்கள் தொகை நிதியம் கூறுகிறது.
பெரும்பாலான ஆணுறைகள் சின்தெடிக் லேடெக்ஸ், கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் பொருட்கள், ரசாயணங்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. எனவே அதை மறுசுழற்சி செய்வது சாத்தியமில்லை.
ரோமானியர்கள் காலத்திலிருந்து லேம்ப்-ஸ்கின் ஆணுறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை மக்கக் கூடியவை, ஆட்டுக் குடலிலிருந்து தயாரிக்கப்படுபவை. அது உடலுறவால் ஏற்படும் நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்காது.
லூப்ஸ் என்றழைக்கப்படும் உராய்வைக் குறைக்கும் பல்வேறு பொருட்களும் பெட்ரோலிய பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. அதாவது மரபுசார் எரிபொருளைக் கொண்டு தயாரிக்கப்படுபவை.
எனவே தண்ணீர் சார்ந்த அல்லது ஆர்கானிக் பொருட்கள் சார்ந்த பொருட்களின் தேவையை அதிகரித்தது. அதோடு வீட்டிலேயே தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளும் முறைகளும் பிரபலமடைந்து வருகின்றன.
பாலுறவு சுகாதாரம் குறித்து காணொளிகளைப் பதிவிடும் மருத்துவர் டெஸ்ஸா காமர்ஸை டிக் டாக் தளத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள்.
சோளமாவு மற்றும் தண்ணீரைக் கொண்டு லூப் எனப்படும் உராய்வைக் குறைக்கும் திரவத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்கிற காணொளியை 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அதுதான் அவர் பதிவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட காணொளியாக உள்ளது.
“தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட உராய்வை குறைக்கும் திரவங்கள், ஆர்கானிக், வீகன் ஆணுறைகள் மகிழ்ச்சியாக பாலுறவு கொள்ள நல்ல தேர்வுகள்” என்கிறார் முனைவர் அகின்செமொலு. “அவை சுற்றுச்சூழலுக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பயன்படுத்துவோருக்கும் நல்ல அனுபவத்தை கொடுக்கும்”
இது போன்ற பொருட்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம் சில பொருட்களை பெரும்பாலான ஆணுறைகளோடு பயன்படுத்த முடியாது. கருத்தடை தொடர்பாக முடிவு செய்யும் போது மருத்துவரிடமோ, குடும்ப கட்டுப்பாட்டு தொழில்முறை வல்லுநர்களிடமோ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
அடுத்து பாலுறவு விளையாட்டு பொருட்களில் அதிக பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இரும்பு அல்லது கண்னாடியில் உருவாக்கப்பட்ட மாற்றுப் பொருட்கள் கிடைக்கின்றன. ரீசார்ஜ் செய்து கொள்ளக் கூடிய பாலுறவு விளையாட்டு பொருட்கள் கழிவுப் பொருட்கள் உருவாவதைக் குறைக்கிறது. அவ்வளவு ஏன் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் பாலுறவு விளையாட்டு பொருட்கள் கூட சந்தையில் கிடைக்கின்றன.
லவ்-ஹனி என்கிற அமைப்பு, வழக்கமாக மறுசுழற்சி செய்ய முடியாத, பழைய மற்றும் உடைந்த பாலுறவு விளையாட்டு பொருட்களை மறு சுழற்சி செய்ய உதவுகிறார்கள்.
சரியான நெறிமுறையில் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகள் மற்றும் ஆடைகளை வாங்குவது, குளித்துக் கொண்டே உடலுறவு கொள்வதை தவிர்ப்பது, குறைவாக சுடு நீரைப் பயன்படுத்துவது, விலக்குகளை அணைத்து வைப்பது, மீண்டும் துவைத்து பயன்படுத்தும் ஆடைகளைப் பயன்படுத்துவது போன்றவை, பூமியின் மீது நம் தாக்கத்தை குறைக்க உதவும் சில வழிகள்.
நாம் வாங்கும் பல பொருட்களில், பேக்கேஜிங் பொருட்கள் பெரும்பாலும் கழிவாகின்றன. தொழில்முனைவோரான லாரன் சிங்கர் நியூயார்க்கைச் சேர்ந்த பூஜ்ஜிய கழிவு ஆளுமையாளர். இந்த இடத்தில் பல நிறுவனங்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்கிறார்.
ஆணுறைகள், லூப்கள், தினசரி கருத்தடை மாத்திரை போன்றவற்றின் பேக்கேஜிங் திறந்தவெளியில்தான் வந்து சேர்கின்றன. லாரன் கிட்டத்தட்ட கழிவுகளின்றி வாழ்ந்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஜார்களில் மறு சுழற்சி செய்ய முடியாத பொருட்களைச் சேகரித்தார்.
ஆணுறைகளை லாரனின் ஜார் பாத்திரங்களில் பார்க்க முடியாது. ஆனால் அது மட்டுமே பாலியல் சார் நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஒரே கருத்தடை சாதனம். அவர் பாலுறவு கொள்வதற்கு முன், தன்னுடைய பாலுறவு கூட்டாளிகள் அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறுகிறார்.
“எனக்கு, ஒருவரோடு மட்டுமே பாலுறவு கொள்ளும் கூட்டாளி ஒருவர் கிடைத்திருக்கிறார். ஒருவரோடு பாலுறவு கொள்வதற்கு முன் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறமுடியவில்லை எனில், அவரோடு உடலுறவு கொள்ளக் கூடாது” என்கிறார் லாரன்.
“எந்த கழிவு உற்பத்தி செய்யத் தகுந்தது அல்லது தகுதியற்றது என்பதை நாம் ஆலோசிக்க வேண்டும்” என்கிறார். “கழிவைக் குறைக்கும் நோக்கில் ஆணுறைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது மற்றும் கருத்தடை செய்து கொள்ளாமல் இருப்பது போன்றவைகளைச் செய்யக் கூடாது. உங்களையும், உங்களின் கூட்டாளியையும் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்” என்கிறார்.
“நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது, சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத பொருட்களைக் பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ, பாதுகாப்பாக உடலுறவு கொள்வது, மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் நல்லது நிலைத்தன்மையானது” என்கிறார் அகின்செமொலு.
2017ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றின்படி, கார் இல்லாமல் ஓராண்டு காலம் வாழ்வது ஆண்டுக்கு 2.3 டன் கார்பன் டை ஆக்ஸைட் வெளியீட்டைக் குறைக்கிறது. செடி கொடிகளை அடிப்படையாகக் கொண்ட உணவுத் திட்டத்தால் ஆண்டுக்கு 0.8 டன் கார்பன் உமிழ்வை குறைக்க முடிகிறது. ஒப்பீட்டளவில். முன்னேறிய நாடுகளில் குழந்தையின்றி வாழ்கிறீர்கள் என்றால் ஆண்டுக்கு 58.6 டன் கார்பன் உமிழ்வை குறைக்கிறீர்கள் என்று பொருள்.
குறைவாக வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் கார்பன் உமிழ்வு மிக குறைவாக உள்ளது, மலாவியில் உள்ள ஒரு குழந்தைக்கு 0.1 டன் அளவுக்கு மட்டுமே கார்பன் உமிழ்வு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக சில ஆளுமைகள் விவாதித்துள்ளனர். தானும் தன் மனைவியும் அதிகபட்சமாக இரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்வோம் என, சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி கடந்த 2019ஆம் ஆண்டு, இளவரசர் ஹாரி ´வோக்´ பத்திரிகையிடம் கூறினார்.
அதே போல, “நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நான் அறிந்த விஷயங்களால், ஒரு பெண்ணின் தாய்மை கனவு தற்போது கசக்கத் தொடங்கியுள்ளது.” என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ கோர்டெஸ், கடந்த 2019ஆம் ஆண்டு சி40 உலக மேயர்கள் உச்சிமாநாட்டில் கூறினார்.
பிரிட்டன் விஞ்ஞானிகள் 10,000 இளைஞர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், எதிர்காலம் ´அச்சமூட்டக் கூடியதாக´ இருப்பதாக 75 சதவீதத்தினர் கூறியுள்ளனர். 41 சதவீதத்தினர் பருவநிலை மாற்றத்தை காரணம் காட்டி குழந்தை பெற்றுக் கொள்ள தயக்கமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு தான் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என கூறுகிறார் மும்பையில் வசிக்கும் தன்மய் ஷிண்டே. 2050ஆம் ஆண்டு அவரது சொந்த ஊர், கடல் மட்ட உயர்வால் மூழ்கி விடும் என ஐபிசிசி கணித்துள்ளது.
தன்மேயின் இந்த முடிவை அவரது பெற்றோரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நம்பிக்கை தொடர்பாக இந்தியாவில் ஒரு பெண்ணை விட, ஓர் ஆணுக்கு இருக்கும் சலுகைகளை அவர் ஆமோதிக்கிறார்.
“இந்தியாவில் திருமணத்துக்குப் பிறகு குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது வாழ்வில் மிக முக்கியமான விஷயம். இந்த கலாசாரத்தைத் தொடர சமூகத்தில் பெரும் அழுத்தமும் கொடுக்கப்படுகிறது” என்கிறார் அவர்.
இந்த முடிவில் ஏதாவது மாற்றம் வருமா? “குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள, ஒரு பாதுகாப்பான பூமி மற்றும் நிலையான வாழ்கைமுறை அவசியம். வலுவான முடிவுகள் எடுக்கப்பட்டு, பெரிய அளவில் கார்பன் உமிழ்வுகளைக் குறைக்கவும், புவி வெப்பமயமாதலை குறைக்கவும் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் வரை, நான் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளமாட்டேன் என்றே கருதுகிறேன்” என்கிறார் தன்மய்.
வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் மீது, கார்பன் உமிழ்வு தொடர்பாக அதிக அளவிலான எதிர்மறையான தாக்கம் இருப்பதாக, ஸ்வீடனைச் சேர்ந்த லண்ட் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் கிம்பர்லி நிகோலஸ் இணைந்து எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று கூறுகிறது.
மக்கள் குழந்தைகளையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்று அவர் வாதிடவில்லை. “மக்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஆதரிப்பதோ அல்லது கேள்விக்கு உட்படுத்துவதோ என் வேலை அல்ல” என்கிறார். “குழந்தை பெற்றுக் கொள்வது ஒருவர் சுதந்திரமாக முடிவு செய்ய வேண்டிய மனித உரிமை. வாழும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு பூமி மற்றும் சமூகத்துக்காக நான் பணியாற்றுகிறேன்”. என்கிறார்.
தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி காலத்தை கழிவின்றி கழித்த லாரன் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.
“நான் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்வது தொடர்பாக யோசித்தேன், அது சரியாக இருக்குமென கருதுகிறேன். உடல் ரீதியாக குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை” என்கிறார் அவர்.
“ஒட்டுமொத்தமாக பூமிக்கு நன்மை பயக்குமா? என்னை விட நீண்ட காலத்துக்கு வாழும் குழந்தை மீது என் மதிப்புகளை திணிக்க முடியுமா, அக்குழந்தை தொடர்ந்து ஒரு நல்ல உலகத்தை உருவாக்க முயற்சிக்குமா?” என கேள்வி எழுப்புகிறார்.