இறுதி யுத்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக 2 பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் அகழ்வு நடவடிக்கை நேற்று (02) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் இன்று (02) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இன்று அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை நேற்று வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே ஏற்கனவே நீதிமன்றம் குறிப்பிட்ட திகதியான நேற்று மேற்படி அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த அகழ்வு பனி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே 2 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றதோடு குறித்த குழிகள் 05 அடிக்கு மேற்பட்ட ஆழம் கொண்ட குழிகளாகவும் காணப்படுவதோடு நீர் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றது.
முதற்கட்டமாக குழிகளில் உள்ள நீரைவெளியேற்றி அகழ்வு நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக குறித்த கிடங்குகளில் இருந்த நீரை வெளியேற்ற முடியாமல் போன காரணத்தினால் நாளை மாலை மீண்டும் இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெறவுள்ளன.
அகழ்வு நடவடிக்கை இடம்பெறும் இடத்தில் பொலிஸார், விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்புகள் பிரசன்னமாகியிருந்த நிலையிலேயே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அகழ்வு நடவடிக்கை ஆரம்பமாகியது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளர்கள் இருவர் இந்த தங்கத்தை முன்கூட்டியே தோண்டி எடுக்க முயற்சித்துள்ளனர்.
இதற்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வீட்டுக்கே சென்று உதவி கோரப்பட்ட போதிலும் அதற்கு அவர் இணங்க மறுத்துள்ளார்.
நீதிமன்றில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 25 ஆம் திகதிக்கு முன்னதாக இரகசியமாக தங்கத்தை தோண்டி எடுக்க உதவுமாறும் கோரியுள்ளனர். எனினும் இந்தக் கோரிக்கையை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிராகரித்துள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
எது எவ்வாறிருப்பினும் குறித்த காணியில் கடந்த 8 ஆம் திகதி அகழ்வு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி குறித்த இடத்தில் 2 பாரிய கிடங்குகள் தோண்டப்பட்டுள்ளன இதன் பின்னரே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் நீதிமன்றை நாடியுள்ளனர். இவ்வாறான நிலையில் 14 ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்த கிடங்கிலிருந்து ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா? அல்லது இடம் மாறி கிண்டப்பட்டு பின்னர் மீள அகழ்வதற்கு பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளதா? அல்லது அகழ்ந்து எடுக்கப்பட்டு அதில் உள்ள கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்தவிடயம் பூதாகாரமாகியுள்ளதா? என்பது இதுவரை புரியாத புதிராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.