” தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித பிளவும் இல்லை. நாம் ஒன்றாகவே பயணிக்கின்றோம். அடுத்த தேர்தலையும் ஒன்றாகவே எதிர்கொள்வோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (16) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்தியா மலையக மக்களுக்கும் எமது நாட்டுக்கும் பல உதவிகளை வழங்கி வருகின்றது. ஆபத்தான நேரங்களில் கை கொடுக்கின்றது. அதேபோல இந்தியாவின் உதவிகள் எமக்கு தொடர்ந்து கிடைக்கும். இந்நிகழ்வில் இந்திய தூதுவர் பங்கேற்றமையால் நுவரெலியா மாவட்டம் பெருமையடைகின்றது. நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்படுகின்றோம். இனியும் செயற்படுவோம். தேர்தல்களையும் கூட்டணியாகவே எதிர்கொள்வோம்.”
உலக திருமரையை எடுத்துக்காட்டிய திருவள்ளுவருக்கும் ஜனவரி 15ம் திகதி தான் பிறந்தநாளாகும். இவரின் பிறந்தநாளை இந்தியாவில் விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஆகவே நாங்களும் மறக்க முடியாது.
அதேநேரத்தில் நான் அமைச்சராக இருந்த காலத்தில் 17 திருவள்ளுவர் சிலையை இலங்கையில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வி.ஜீ.பி. நிறுவனத்தின் ஆதரவுடன் நிறுவுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததது.
திருவள்ளுவர் இயற்றிய திருகுறளை பாடசாலை மாணவர்களும், ஏனையவர்களும் பின்றபற்ற வேண்டும் என்றார்.